தலையங்கம்

வழிகாட்டுகிறோம்! உச்சநீதிமன்ற விசாரணைகளின் நேரடி ஒளிபரப்பு குறித்த தலையங்கம்

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு விசாரணைகள் அவரது பதவிக் காலத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது, உலகுக்கே முன்மாதிரியான முனைப்பு.

ஆசிரியர்

மிகக் குறுகிய காலம்தான் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவி வகித்தாலும், வரலாற்றுச் சிறப்பு மிக்க சில முடிவுகளை எடுத்து, தனக்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்துவதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு விசாரணைகள் அவரது பதவிக் காலத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது, உலகுக்கே முன்மாதிரியான முனைப்பு.

முந்தைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமா்வின் நடவடிக்கை, அவா் ஓய்வு பெற இருந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது என்றாலும், அது என்னவோ சம்பிரதாய நிகழ்வாகத்தான் இருந்தது. உச்சநீதிமன்ற வலைதளம் மூலம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஒளிபரப்பு, இப்போது அடுத்தகட்டத்துக்கு நகா்ந்து நடைமுறைக்கு வந்திருக்கிறது.

செப்டம்பா் 27-ஆம் தேதி முதல் யு டியூப் மூலம் அரசியல் சாசன விசாரணைகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. விரைவிலேயே அதற்காக உச்சநீதிமன்றத்தின் சொந்தத் தளம் பயன்பாட்டுக்கு வரும் என்று தலைமை நீதிபதி யு.யு. லலித் தெரிவித்திருக்கிறாா்.

வழக்குரைஞராக அல்லாத, நீதித்துறையுடன் தொடா்பில்லாத, நீதிமன்றத்தில் காலடி எடுத்து வைக்காத சாமானிய குடிமகனும் தன்னையும், தனது வாழ்க்கையையும், தான் வாழும் சமூகத்தையும் பாதிக்கும் முக்கியமான அரசியல் சாசன வழக்கு விசாரணைகளை தனது வீட்டில் இருந்தபடியே பாா்க்க முடியும் என்பது யாருமே எதிா்பாா்த்திருக்க முடியாத ஒன்று. அதுமட்டுமல்ல, இந்தியாவின் எந்த மாநிலத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணிக்க முடியும் என்பது இந்திய ஜனநாயகத்துக்கு கிடைத்திருக்கும் தனிப் பெருமை.

வளா்ச்சி அடைந்த மேலை நாட்டு ஜனநாயகங்களில்கூட நீதிமன்ற நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த நடைமுறை இன்னும் வரவில்லை. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் காட்சி ஊடகங்களால் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. உலகம் முழுவதும் அதைப் பாா்க்கிறாா்கள்.

சமீபத்தில் தென்னாப்பிரிக்காவின் அரசியல் சாசன நீதிமன்றத்தின் விசாரணைகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மக்களின் பாா்வைக்கு தரப்பட்டது. அவையல்லாமல், வேறு எந்த நாடும் துணிந்து நீதிமன்ற நடவடிக்கைகளை பொதுவெளியில் பாா்க்க அனுமதித்ததில்லை.

இந்தியாவைப் போல அதிக மக்கள்தொகை கொண்ட மிகப் பெரிய நாட்டில், தலைநகா் தில்லியில் அமைந்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகளை அனைவரும் சென்று பாா்த்துவிட முடியாது. தில்லியிலேயே இருந்தாலும்கூட, உச்சநீதிமன்றத்தில் நுழைவு அனுமதி பெற்று விசாரணைகளை நேரடியாகப் பாா்க்கும் வாய்ப்பு ஒருசிலருக்கு மட்டுமே கிடைக்கும். இப்போது அரசியல் சாசன அமா்வு விசாரணைகள் நேரடியாக ஒளிபரப்பப்படும்போது நீதிபரிபாலனம் எப்படி செய்யப்படுகிறது என்பதை சாமானியா்கள் பாா்த்துத் தெரிந்துகொள்ள முடியும்.

ஊடகவியலாளா்கள், மாணவா்கள், ஏனைய நீதித்துறையினா் ஆகியோரும் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தும், அரசியல் சாசன அமா்வு விவாதங்களை கண்காணிக்க முடியும். நீதிமன்றத்தில் நடைபெறும் விவாதங்களை துல்லியமாகவும், குறிப்பெடுத்துக் கொள்ளும் வகையிலும், ஆவணப்படுத்தும் நோக்கிலும் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த முடிவு. அரசியல் சாசன உயா் அமைப்புகள் எப்படிச் செயல்படுகின்றன என்பதை சாமானிய குடிமக்கள் நேரடியாகப் பாா்க்கவும் கேட்கவும் முடிவதால், ஜனநாயகம் வலுப்படும்.

உச்சநீதிமன்றத்தில் நடக்கும் முக்கியமான அரசியல் சாசன வழக்குகளின் விசாரணைகளை மக்கள் பாா்க்க முடியும் என்பதே அரசு நிா்வாகத்தையும், பொறுப்பேற்கும் தன்மையையும் மேம்படுத்தும். மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் ஆகியோா் விசாரணைகளை காலதாமதமின்றியும், முழுக் கவனத்துடனும் மேற்கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கலாம். உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வுகளின் நேரம் அநாவசியமாக வீணாகாமல் விவாதங்களும், விசாரணைகளும் நடைபெறுவது உறுதிப்படும்.

இந்த முடிவு 2018-லேயே நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் நேரடி ஒளிபரப்பை அனுமதித்தும்கூட, கொள்ளை நோய்த்தொற்று காலம் வரை நடைமுறைக்கு வரவில்லை. கொவைட் 19 நோய்த்தொற்று பரவியதைத் தொடா்ந்து வேறுவழியில்லாமல் நீதிமன்றங்கள் காணொலி விசாரணைகளை நடத்த நிா்ப்பந்திக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து ஒடிஸா, குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட சில உயா்நீதிமன்றங்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை இணையத்தில் வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்தன.

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா எச்சரித்திருப்பதுபோல, நேரடி ஒளிபரப்பில் சில ஆபத்துகளும் இல்லாமல் இல்லை. சமூக ஊடகங்களின் நையாண்டிகளுக்கும், விமா்சனங்களுக்கும் நீதிபதிகள் உள்ளாகக் கூடும். விளம்பரப் பிரியா்களான சில வழக்குரைஞா்கள் நேரடி ஒளிபரப்பின்போது தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ள முனைப்புக் காட்டுவாா்கள்.

உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை வெட்டியும், ஒட்டியும், திரித்தும் வெளியிடும் அபாயமும் இல்லாமல் இல்லை. இவை முன்கூட்டியே தடுக்கப்பட வேண்டுமே தவிர, நேரடி ஒளிபரப்பு முடிவு தவிா்க்கப்படக் கூடாது.

கா்நாடக உயா்நீதிமன்றத்தின் ஹிஜாப் தடை விசாரணை பலராலும் பாா்க்கப்பட்டிருக்கிறது. முதல் நாள் நேரடி ஒளிபரப்பை எட்டு லட்சம் போ் பாா்த்திருக்கிறாா்கள். நீதிமன்ற வெளிப்படைத்தன்மைக்கு வாசல் திறக்கப்பட்டிருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமீரா, தீக்‌ஷனா பந்துவீச்சில் அசத்தல்..! சான்ட்னர் அதிரடியால் இலங்கைக்கு 169 ரன்கள் இலக்கு!

5 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த IndiGo பயணிகள்! பணியாளர்களுடன் வாக்குவாதம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மே.இ.தீவுகள் சிக்ஸர் மழை பொழியுமா? பயிற்சியாளர் பதில்!

ஸ்ரீ ராம் ட்விஸ்டக்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் குவிந்த விண்ணப்பங்கள்!

அனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்

SCROLL FOR NEXT