கலசலிங்கம் பல்கலை: கொரியாவில் ஒரு செமஸ்டர் இலவசமாக படிக்க வாய்ப்பு
கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் தென் கொரியாவில் உள்ள சூங்கில் பல்கலையில் ஒரு செமஸ்டர் தங்கி இலவசமாக படிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் தென் கொரியாவில் உள்ள சூங்கில் பல்கலைக்கழத்தில் ஒரு செமஸ்டர் தங்கி இலவசமாக படிப்பதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இத் திட்டத்தின் கீழ் முழு கல்வி உதவித் தொகையுடன் ஒரு மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் வெளியுறவுத் துறைக்கான டீன் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கலசலிங்கம் பல்கலைக்கழகம் தென் கொரியாவில் உள்ள சூங்கில் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர்கள் தனது ஒரு செமஸ்டர் படிப்பை தென் கொரியாவில் உள்ள சூங்கில் பல்கலைக்கழகத்தில் பயிலலாம். அம் மாணவர் சூங்கில் பல்கலைக்கழத்தில் எடுக்கும் மதிப்பெண், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்படும்.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு பி.டெக்., இயந்திரவியல் படிக்கும் மாணவர் ஆர்.வேல்சங்கர் தனது ஆறாவது செமஸ்டரை சூங்கில் பல்கலைக்கழகத்தில் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் படி அவர் மார்ச் 2013 முதல் ஜூன் 2013 முடிய தென் கொரியாவில் தங்கி தனது படிப்பைத் தொடருவார். தேர்வு பெற்றுள்ள மாணவரை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் பி.கன்னியப்பன், பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.