சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளராக பேராசிரியர் ஆர்.ஸ்ரீநிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக இருந்த டேவிட் ஜவஹரின் பதவிக் காலம் கடந்த மார்ச் 6-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு பொறுப்பு பதிவாளராக பல்கலைக்கழக உளவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். கருணாநிதி கடந்த மார்ச் 7-ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே புதிய பதிவாளரைத் தேர்வு செய்வதற்கான பணிகளையும் சென்னைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டது. அதன் இறுதிக் கட்டமாக, புதிய பதிவாளரைத் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பல்கலைக்கழகத்தின் எகனாமெட்ரிக்ஸ் துறை பேராசிரியர் ஆர்.ஸ்ரீநிவாசன் புதிய பதிவாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்வுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிக் குழுக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது. அதன் மூலம் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை வகிப்பார். இவர் தமிழக அரசின் திட்டக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.