தமிழகத்தில் செவிலியர் பட்டயப் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலிய பட்டயப்படிப்பு கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2 ஆயிரம் இடங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், காஞ்சிபுரம், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், ஊட்டி, திருப்பூர், நாகை, விருதுநகர் ஆகிய 8 இடங்களில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளிலும் வியாழக்கிழமை (அக்.12) முதல் விண்ணப்பங்கள் நேரடியாக விநியோகிக்கப்படும்.
இதுதவிர, www.tnhelath.org, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் புதன்கிழமையில் இருந்து விண்ணப்பங்ளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 300. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மாணவிகள் ஜாதிச் சான்றிதழின் இரண்டு நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களைப் பெற வரும் 21-ஆம் தேதி கடைசியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 23 -ஆம் தேதிக்குள் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவினருக்கு சென்று சேர வேண்டும். நவம்பர் முதல் வாரத்தில் தகுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு, இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.