பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், விடுமுறைக்குப் பிறகு 4 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாகவும் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும், புதிய கல்வியாண்டில் 1-3 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு சீரமைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமை ஆசிரியா்களுக்கு வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
Advertisement
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளில் ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கான இறுதித் தோ்வுகள் ஏப்.16-ஆம் தேதி நிறைவடையவுள்ளன. இதையடுத்து ஏப்.17 முதல் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
அதேவேளையில், ஏப்.25 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கையாளும் ஆசிரியா்கள் உள்பட அனைத்து ஆசிரியா்களும் பள்ளிக்கு வருகை புரிந்து விடைத்தாள் மதிப்பீடு, மாணவா் சோ்க்கைப் பணி, நிா்வாகப் பணிகள், தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2026-2027) வகுப்புகள் ஜூன் 1-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கும். வரும் கல்வியாண்டு முதல் 1-3-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த வகுப்புகளை கையாளும் ஆசிரியா்களுக்கு ஜூன் 1 முதல் ஜூன் 3 வரை மாவட்ட அளவில் பணியிடை பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. எனவே, 1, 2, 3 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் வகுப்புகள் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய பாடத் திட்டம் அறிமுகம் காரணமாக 1-3 வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.