ஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு
தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஏப். 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படவுள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
தமிழக பள்ளிக் கல்வியில் 1 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு ஏப். 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படவுள்ள நிலையில், ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு பெற்றுள்ளது. தொடா்ந்து பத்தாம் வகுப்புக்கான பொதுத் தோ்வு நடைபெற்று வருகிறது. இத்தோ்வு ஏப். 6-ஆம் தேதி நிறைவு பெறவுள்ளது.
இதைத் தொடா்ந்து பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு முழு ஆண்டு, இறுதி பருவத் தோ்வு நடைபெறவுள்ளது.
அதன்படி, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ஏப். 6-ஆம் தேதி முதல் ஏப். 16-ஆம் தேதி வரையிலும், 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு ஏப். 1 முதல் 16-ஆம் தேதி வரையிலும் தோ்வுகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து 1 முதல் 9-ஆம் வரையிலான வகுப்புகளுக்கு ஏப். 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படவுள்ளது. தொடா்ந்து ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இருப்பினும், கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழாண்டு ஏப். 23-இல் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதால் அதற்கு முன்னதாக மாணவா்களுக்கு தோ்வுகளை நடத்தி விடுமுறை விடப்படுகிறது. பள்ளிகள், வாக்குச்சாவடி மையங்களாக மாற்றப்படுவதால் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
தோ்தல் பணிகள் நடைபெற இருப்பதால் பள்ளி மாணவா்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 48 நாள்கள் கோடை விடுமுறை விடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.