தோல் பதனிடுதல் பழமையான தொழில் நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல், தோல் பொருள்கள் ஏற்றுமதி முக்கிய இடம் பிடித்துள்ளது. இத்தொழில் மூலம் ஈட்டப்படும் அந்நியச் செலாவணி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
இந்தியாவில் தோல் பதனிடுதல், தோல் காலணி தயாரிப்பு சார்ந்த உப தொழில்கள் என சுமார் 4 ஆயிரம் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. பன்னாட்டு அளவில் தோல் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 13 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, திருச்சி,திண்டுக்கல், ஈரோடு, உத்தரபிரதேச மாநிலத்தில் கான்பூர், ஆக்ரா, நொய்டா, ஷரான்பூர்; மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, பஞ்சாபில் ஜலந்தர், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூர், கர்நாடகத்தில் பெங்களூரூ, தெலங்கானாவில் ஹைதராபாத், ஹரியாணாவில் குர்கான், அம்பாலா, பஞ்ச்குலா, கர்னால், ஃபரிதாபாத், மத்திய பிரதேசத்தில் திவாஸ், கேரளத்தில் கோழிக்கோடு, எர்ணாகுளம், கொச்சி ஆகிய இடங்களிலும் தில்லியிலும் தோல் தொழில் நடைபெறுகிறது.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்பட உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து தோல் மற்றும் தோல் பொருள்கள் ஏற்றுமதியாகின்றன. இத்தகைய தோல் தொழிலில் சிறந்து விளங்க, தோல் தொழில்நுட்பப் படிப்புகள் அவசியமாகின்றன.
தோல் உற்பத்தி
விலங்குகளின் தோல் பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்தியாவில் தோல் பதனிடும் தொழில்நுட்பம் உலகத் தரத்தில் உள்ளது. இந்தியாவில் தரமான ரசாயனங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் தோல் மற்றும் தோல் பொருள் உலக அரங்கில் தனித்துவம் வாய்ந்ததாக உள்ளன.
தற்போது புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள என எல்டபிள்யுஜி எனப்படும் லெதர் வொர்க்கிங் குரூப் சான்றிதழ் பெறுவதன் மூலமாக, இந்திய தோல் தொழிற்சாலைகள் உலக அரங்கில் உள்ள மற்ற நாட்டு தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு தோல் பொருள்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தோல் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்புக்கான தொழில்நுட்பப் படிப்புகள் பல்வேறு பல்கலைக் கழகங்கள், அரசு, அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளல் நடத்தப்படுகிறது.
தோல் தொழில்நுட்பத்தில் சான்றிதழ் படிப்பு, பட்டப் படிப்பு என இரு வகையான படிப்புக உள்ளன. இப்படிப்புகள் தோல் உற்பத்தி, தோல் பொருள் களின் வகைப்பாடு, தோலுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களின் தன்மைகள், அதன் விளைவுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. தோல் பதனிடும்போது வெளியேறும் கழிவுநீரை சுத்திகரித்து பயன்படுத்துவது குறித்த விளக்கம் அடக்கிய தொழில்நுட்ப படிப்புக்கான பாடதிட்டங்களை அரசு அமல்படுத்தியுள்ளது.
தோல் தொழில்நுட்பம் தொடர்பான பட்டயம் முதல் ஆராய்ச்சி வரையிலான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள்
1 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
2. மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் (சிஎஸ்ஐஆர் - சிஎல்ஆர்ஐ) சென்னை.
3. அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை.
4. கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரி, ஆம்பூர்.
5. கர்நாடக தோல் தொழில்நுட்பக் கல்வி நிலையம், பெங்களூரு.
6. ஹர்கோர்ட் பட்லர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் கான்பூர்.
7. அரசு தோல் கல்வி நிலையம், கான்பூர்
8. அரசு தோல் கல்வி நிலையம், ஆக்ரா
9. அரசு பொறியியல் மற்றும் தோல் தொழில்நுட்பக் கல்லூரி, கொல்கத்தா,
10. ஆரியபட்டா நாலேஜ் பல்கலைக்கழகம், பாட்னா,
11. சிஎம்ஜே பல்கலைக்கழகம், ஷில்லாங்
12. அரசு பாலிடெக்னிக், மும்பை
தோல் தொழில்நுட்பப் படிப்பு படித்தவர்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பு கிடைக்கிறது தோல் தொழில்நுட்பம் படித்த பாலிடெக்னிக் மானவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வு மூலம் உடனடியாக வேலைவாய்ப்பும் கிடைக்கிறது. தோல் தொழில்நுட் கல்வி முடித்தவர்கள் சுய தொழிலையும் தொடங்கலாம்.
-எம்.அருண்குமார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.