தமாகா களம் கண்ட 5 சின்னங்கள்!
1996-இல் மூப்பனரால் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இதுவரை 5 சின்னங்களில் களம் கண்டுள்ளது.
1996-இல் மூப்பனரால் தொடங்கப்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இதுவரை 5 சின்னங்களில் களம் கண்டுள்ளது.
கட்சி தொடங்கியபோது சந்தித்த மக்களவை, பேரவைத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் வழங்கிய சைக்கிள் சின்னத்தை, தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனக்கான அங்கீகார சின்னமாக மாற்றிக் கொண்டது.
1996 தேர்தலில் 41 இடங்களில் போட்டியிட்ட தமாகா, 39 இடங்களில் வெற்றிபெற்றது. 1996 மக்களவைத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட்டு 20 இடங்களையும் வென்றது. மீண்டும் 1998 மக்களவைத் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் 20 இடங்களில் போட்டியிட்டு 3 தொகுதிகளை கைப்பற்றியது.
1999 மக்களவைத் தேர்தலிலும் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. 2001-இல் சட்டப் பேரவைத் தேர்தலில் 32 தொகுதிகளில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டு 23 இடங்களில் வென்றது.
மூப்பனார் மறைவுக்குப் பிறகு கட்சியின் தலைவர் பொறுப்பேற்ற ஜி.கே. வாசன், 2002-இல் கட்சியை காங்கிரஸýடன் இணைத்துவிட்டார். மீண்டும் 2014-இல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய ஜி.கே.வாசன், 2016 பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்று தென்னந்தோப்பு சின்னத்தில் தமாகா களம் கண்டது.
2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தமாகா ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டது. 2021 பேரவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைத்து களம் கண்டது.
2026 பேரவைத் தேர்தலில் ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், ஒட்டன்சத்திரம், கும்பகோணம் என 5 தொகுதிகளில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது.
இக்கட்சி இதுவரை சைக்கிள், தென்னந்தோப்பு, ஆட்டோ, இரட்டை இலை சின்னங்களில் போட்டியிட்டு, இப்போது 5-ஆவது சின்னமாக, தாமரையில் போட்டியிடுகிறது.
சின்னங்கள் மாறிக்கொண்டே இருந்தாலும் களப்பணி முக்கியம், கூட்டணியின் பலமும் முக்கியம். அதை உணர்ந்துதான் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாகக் கூறியுள்ளார் ஜி.கே. வாசன். அதிமுக தமிழகத்தின் முதன்மையான கட்சி, பாஜக இந்தியாவின் முதன்மையான கட்சி இந்த 2 கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணியில் இருக்கும்போது, நல்ல அரசை அமைக்கக்கூடிய சின்னமாக நாங்கள் இந்தச் சின்னங்களை (இரட்டை இலை, தாமரை) கருதுகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
- ஆர்.முருகன்.