உ.பி.யில் கச்சத்தீவு பற்றி பேசுகிறார் மோடி: மு.க. ஸ்டாலின்
ஆரணி வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்.
தோல்வி பயத்தில் பிரதமர் நரேந்திர மோடி உளறுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய அவர், குழப்பத்தில் உள்ள பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் கச்சத்தீவு பற்றி பேசுகிறார். தோல்வி பயத்தில் மோடி உளறுகிறார்.
அமலாக்கத் துறை, வருமான வரித் துறையுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. பாஜக ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்.
சமூகநீதி காக்க ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அரசியல் சட்டம் காக்க, பன்முகத்தன்மை காக்க பாஜக அரசு முதலில் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்.
தமிழகத்துக்கு மத்திய அரசு 5 ஆயிரம் கோடி தந்தது சர்வதேச வங்கிகள் வழங்கிய கடன் தொகையைத்தான். தமிழகத்திற்கு நிதியைத் தராமல், மோடியைப் போன்று நிர்மலா சீதாராமனும் வாயால் வடை சுடுகிறார். கந்துவட்டிக்காரரைப் போல கணக்கு கேட்கிறார்.
அண்மையில் பிரதமரின் நேர்காணலைப் பார்த்தேன். பார்க்க நகைப்பாக இருந்தது.
அமலாக்கத் துறைக்கும் தனக்கும் தொடர்பில்லை என பிரதமர் மோடி பொய் கூறுகிறார். அவரின் இந்தப் பேச்சைக் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
10 ஆண்டில் தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்த சிறப்புத் திட்டங்கள் என்னென்ன என்பதற்கு மோடியிடம் பதில் இல்லை என மு.க. ஸ்டாலின் பேசினார்.