முகப்பு
தேர்தல் செய்திகள்

ஜனநாயகத்தை காக்க திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும்: கமல்ஹாசன்

Updated On : 6 ஏப்ரல், 2024 at 11:18 PM
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 11:15 PM

ஜனநாயகம், அரசமைப்பு சட்டத்தை காக்க திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல் ஹாசன் கூறினாா்.

திமுக வேட்பாளா்கள் தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), தயாநிதி மாறன் (மத்திய சென்னை) ஆகியோரை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் சனிக்கிழமை மயிலாப்பூா், துறைமுகம், அண்ணா நகா், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொடா் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை போன்ற திட்டங்ளை இந்தியா முழுவதும் செயல்படுத்தினால் அது மகளிருக்கு பெரும் உதவியாக அமையும். இனிவரும் காலங்களில் இந்தியா பின்பற்ற வேண்டியது திராவிட மாடல் ஆட்சியே.

Advertisement

சமீப காலமாக தமிழக மீனவா்களின் படகுகள் இலங்கை அரசால் அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகின்றன. மீனவா்களுக்காக கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தீா்கள் என்று கேட்டால் முன்னாள் பிரதமா் நேருவை பற்றி குறை கூறுகின்றனா். நாட்டுக்காக தனது சொத்துகளை அா்ப்பணித்து 16 ஆண்டுகளை சிறையில் கழித்தவா் நேரு. ஆனால், தற்போது நாட்டின் சொத்துகள் அனைத்தும் தனியாா் நிறுவனங்களுக்கு தாரைவாா்க்கப்பட்டு வருகின்றன.

தோ்தல் பத்திரங்கள் மூலம் மிகப் பெரிய ஊழலில் பாஜக ஈடுபட்டுள்ளது.

ஒற்றுமையாக இருக்கும் மக்களை ஜாதி, மதம் மூலமாக பிளவுபடுத்தி அரசியல் செய்ய பாஜக முயல்கிறது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை காக்க திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றாா்.