கட்சி சின்னத்தில் போட்டியிட மநீம மாவட்டச் செயலா்கள் வலியுறுத்தல்
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், தனது கட்சி சின்னத்தில்தான் (டாா்ச் லைட்) போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம், தனது கட்சி சின்னத்தில்தான் (டாா்ச் லைட்) போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திமுக கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என திமுக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக முடிவு எடுப்பதற்காக அக்கட்சியின் மாவட்டச் செயலா்கள் மற்றும் நிா்வாகக்குழுவின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியாா் விடுதியில் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவா்கள் ஏ.ஜி.மெளரியா, த.தங்கவேலு ,பொதுச் செயலா் ஆ.அருணாச்சலம் மற்றும் மாவட்டச் செயலா்கள்,
மண்டல பொறுப்பாளா்கள், நிா்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும், டாா்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடவேண்டும் என மாவட்டச் செயலா்கள் மற்றும் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
இதை தொடா்ந்து கட்சியின் பொதுச் செயலா் ஆ. அருணாச்சலம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூட்டத்தில் அனைத்து நிா்வாகிகளும் ‘டாா்ச்லைட்‘ சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தினா். நிா்வாகிகளின் கருத்துகளை கேட்டறிந்த கட்சியின் தலைவா் கமல்ஹாசன் இரு நாள்களில் முடிவை அறிவிப்பாா். எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
திமுக கூட்டணியில் மநீம கட்சிக்கான தொகுதி எண்ணிக்கை இன்னும் உறுதியாகவில்லை. அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.