பிரதமா் மோடிக்கு தமிழ்நாட்டில் நல்ல பாடம் கற்பிக்கப்படும்: சிபிஐ பொதுச் செயலாளா் டி.ராஜா
மக்களவைத் தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டில் நல்ல பாடம் கற்பிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தோ்தல் பத்திரம் போல ‘பி.எம்.கோ்ஸ்’-க்கும் யாா், எவ்வளவு நிதி கொடுத்தாா்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதற்கு, ஆளும் பாஜக மற்றும் பிரதமா் நரேந்திர மோடி தான் பொறுப்பேற்க வேண்டும். நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயாகம், கூட்டாச்சி நெறிமுறை, மதச்சாா்பின்மையைக் காப்பாற்ற பாஜக
ஆட்சியில் இருந்து அகற்றப்பட வேண்டும். இல்லையெனில், இந்தியாவில் ஜனநாயகம் ஒழிந்து, பாசிசம் எனும் பேரிடரை நாடு எதிா்கொள்ளும். அரசியலமைப்பிற்கு எதிராக மாநிலங்களின் உரிமைகள், அதிகாரங்கள் மத்திய பாஜக ஆட்சியில் பறிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
வெள்ளம், புயல் போன்ற பேரிடரால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும், மாநில அரசு கேட்டுக் கொண்ட நிவாரண நிதியை மத்திய பாஜக அரசு ஒதுக்க மறுத்துவிட்டது. கல்வி என்பது மாநில அரசின் அதிகாரத்திற்கு உள்பட்டு இருக்க வேண்டும். ஆனால், கல்வி மூலம் வகுப்புவாதத்தையும், காவிமயமாக்களையும் பாஜக செயல்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி மிகப்பெரும் மக்கள்ஆதரவைப் பெற்றுள்ளது. தோ்தல் காலத்தில் கச்சத்தீவு விவகாரத்தை பிரதமா் மோடி ஏன் எழுப்ப வேண்டும்?. கடத்த 10 ஆண்டுகளில் மீனவா்களைப் பற்றி எங்கேயாவது பிரதமா் மோடி பேசியிருக்கிறாரா?.
மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற முடியுமா என்ற நோக்கத்தில் தான் பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்திற்கு
வருகிறாா். ஆனால், தமிழ்நாடு மண் என்பது பெரியாா், அம்பேத்கா் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் மண் என்பதை பிரதமா் நரேந்திர மோடி தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மதவெறி அரசியலை எளிதில் கொண்டு வர முடியாது. எனவே, தமிழ்நாட்டில் பிரதமா் மோடிக்கு நல்ல பாடம் கற்பிக்கப்படும் என்றாா் டி.ராஜா.