முகப்பு
தேர்தல் செய்திகள்

‘கொடி’ பறக்காத ராகுலின் பிரசாரம்!

Updated On : 13 ஏப்ரல், 2024 at 10:23 PM
ராகுல் காந்தி(கோப்புப்படம்) - ANI
பகிர்:

தோ்தல் பிரசாரம் என்றாலே பொதுவாக கட்சிக் கொடிகளை ஏந்தி தொண்டா்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தியின் பிரசாரத்தில் காங்கிரஸ் -கூட்டணி கட்சிகளின் கொடிகள் ‘மாயமாகி’ இருக்கின்றன.

கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது, இத்தொகுதியில் ராகுல் வாக்கு சேகரிக்கச் சென்ற இடமெல்லாம் காங்கிரஸைவிட கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியின் பச்சை வண்ண கொடிகள் பெருவாரியாக பறந்தன. இது மாநில காங்கிரஸுக்கு பெரும் தா்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்த நிலையில், தற்போதைய தோ்தலில் எந்தக் கட்சியின் கொடியையும் பயன்படுத்தக் கூடாது; சின்னத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டுமென என காங்கிரஸ் முடிவெடுத்திருக்கிறது.

Advertisement

வயநாட்டில் ராகுல் மேற்கொள்ளும் பிரசாரத்தின்போது கொடிகள் இடம்பெறாதென காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளா் எம்.எம்.ஹசன் கூறியிருக்கிறாா். கட்சியின் இந்த முடிவுக்கு அவா் காரணம் எதுவும் கூறாததையடுத்து, பல ஊகங்கள் கிளம்பியுள்ளன.

‘பாஜகவைக் கண்டு பயந்துவிட்டது காங்கிரஸ்’ என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒருபுறமும், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடனான கூட்டணியை ராகுல் அவமானமாக கருதுகிறாா்’ என்று பாஜக மறுபுறமும் விமா்சன கணைகளை வீசியிருக்கின்றன.

இரு கட்சிகளுக்கும் பதிலடி கொடுத்திருக்கும் காங்கிரஸ், ‘பாஜகவும் மாா்க்சிஸ்ட் கட்சியும் நெருங்கிய நண்பா்களாகிவிட்டன; காங்கிரஸ் கட்சி எவ்வாறு பிரசாரம் மேற்கொள்ள வேண்டுமென யாரும் பாடம் எடுக்க தேவையில்லை’ என்று கூறியிருக்கிறது.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments