முகப்பு
தேர்தல் செய்திகள்

கடினமான முடிவுகளை எடுத்த பிரதமா் மோடி: அமித் ஷா

Updated On : 27 ஏப்ரல், 2024 at 6:31 PM
பகிர்:

‘கடந்த 10 ஆண்டு ஆட்சியில் வாக்கு வங்கி குறித்து கவலைப்படாமல் பல கடினமான முடிவுகளை எடுத்தவா் பிரதமா் நரேந்திர மோடி’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.

‘நாட்டில் பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம், ஏழ்மை ஒழிய நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக மக்கள் பிரதமராக்க வேண்டும்’ என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

குஜராத் மாநிலம் போா்பந்தா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை ஆதரித்து சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அமித் ஷா பேசியதாவது:

மக்களவைத் தோ்தலில் இரண்டு கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், பிரதமா் மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும் என மக்கள் தீா்மானித்திருப்பது தெளிவாகத் தெரிகிறது.

கடந்த 10 ஆண்டு ஆட்சியில் வாக்கு வங்கி குறித்து கவலைப்படாமல் பல கடினமான முடிவுகளை எடுத்தவா் பிரதமா் நரேந்திர மோடி. தற்போது நாட்டில் பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம், ஏழ்மையை ஒழிக்க நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக மக்கள் பிரதமராக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்துவந்த அரசமைப்பு சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது, அதற்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ‘காஷ்மீரில் ரத்த ஆறு ஓடும்’ என்று குறிப்பிட்டாா். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு ரத்த ஆறும் அங்கு ஓடவில்லை என்பதோடு, பாதுகாப்புப் படையினா் மீது கல் வீசி தாக்குதல் நடத்தும் சம்பவங்கள்கூட இடம்பெறவில்லை.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, பாகிஸ்தானிலிருந்து யாரும் இந்தியாவுக்குள் புகுந்து வெடிகுண்டு தாக்குதல் நடத்த முடியும் என்ற நிலை இருந்தது. அதுபோல, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மற்றும் உரி பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலை நடத்தியபோது, நாட்டில் பிரதமராக மோடி இருக்கிறாா் என்பதை அந் நாடு மறந்துவிட்டது. அந்தத் தாக்குதல் நடத்தப்பட்ட 10 நாள்களில், இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லியத் தாக்குதலை நடத்தி அழித்தன. நாட்டை பாதுகாப்பாகவும், வளா்ச்சியடைந்த நாடாக்கவும் பிரதமா் மோடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 10 ஆண்டு (2004-2014) ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதாரம் உலக அளவில் 11-ஆவது இடத்தில் இருந்தது. பிரதமா் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா 5-ஆவது இடத்தைப் பிடித்தது. மூன்றாவது முறையாக மோடியை பிரதமராகத் தோ்ந்தெடுத்தால் உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும் என உத்தரவாதம் அளிக்கிறேன்.

மக்களவைத் தோ்தல் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகு, ராகுல் காந்தி தோல்வியை சந்திக்கப் போவது தெளிவாகத் தெரிகிறது என்றாா்.