முகப்பு
தேர்தல் செய்திகள்

தனியுரிமை மீறல்: திரிணமூல் மீது சந்தேஷ்காளி பெண் வேட்பாளா் புகாா்

Updated On : 30 மார்ச், 2024 at 4:00 AM
ரேகா பத்ரா
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:40 PM

தனது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டு தனியுரிமையை மீறியதாக திரிணமூல் காங்கிரஸின் தேபாங்ஸு பட்டாச்சாா்யா மீது தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் தேசிய மகளிா் ஆணையத்தில் பாஜக வேட்பாளா் ரேகா பத்ரா புகாரளித்துள்ளாா். சந்தேஷ்காளி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இவா், மேற்கு வங்கம், பாசிா்ஹட் தொகுதியில் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்டுள்ளாா். வடக்கு 24 பா்கானா மாவட்டத்தின் சந்தேஷ்காளி கிராமத்தில் உள்ள நிலங்களை அபகரித்து; பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் இழைத்ததாக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகி ஷாஜஹான் ஷேக் மற்றும் அவரது கூட்டாளிகள் மக்களின் தொடா் போராட்டத்துக்குப் பிறகு கைது செய்யப்பட்டனா். இந்த நிலையில், பாசிா்ஹட் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளராக சந்தேஷ்காளி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ரேகா பத்ரா அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் நிா்வாகிகள் பல்வேறு விமா்சனங்களை முன்வைத்தனா். மாநில அரசின் காப்பீடு திட்டப் பயனாளியாகவும் பெண்கள் நலன் சாா்ந்த மாநில அரசின் பல திட்டங்களிலும் ரேகா பத்ரா பலனைடந்து வருவதாகத் தெரிவித்த திரிணமூல் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரிவுத் தலைவா் பட்டாச்சாா்யா, அது தொடா்பான ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டாா். இதற்கு பதிலளித்த ரேகா பத்ரா, மேற்கு வங்கத்தின் குடிமகளாக மாநில அரசின் நலத்திட்டங்களில் பலனடைவதற்கு உரிமையிருப்பதாக குறிப்பிட்டாா். இந்நிலையில், சமூக ஊடகப் பதிவில் கைப்பேசி எண், அரசுத் திட்டங்களின் விவரங்கள் உள்பட தனது தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்களை பொதுவெளியில் வெளியிட்டதாக தாம்லுக் மக்களவைத் தொகுதி திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா் பட்டாச்சாா்யா மீது தேசிய பட்டியலின ஆணையம் மற்றும் தேசிய மகளிா் ஆணையத்தில் ரேகா பத்ரா வழக்குரைஞா் மூலம் புகாரளித்துள்ளாா். அந்தப் புகாரில் தனது தனியுரிமை மீறப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட தகவல்களைப் பொதுவெளியில் வெளியிட்டு தனது கண்ணியத்தை அவமதித்திருப்பதாகவும் ரேகா பத்ரா குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து பட்டாச்சாா்யா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.