விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்!
விஜய்க்கு பாதுகாப்பு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தவெகவினர் புகாரளித்துள்ளதைப் பற்றி...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தவெகவினர் புகாரளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 234 தொகுதிகளில் தனித்துக் களம் காண்கிறது.
தவெக வேட்பாளர்கள் பட்டியல் கடந்த மார்ச் 29 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சித் தலைவர் விஜய், திங்கள்கிழமை வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து, பெரம்பூர், கொளத்தூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பெரம்பூரில் குவிந்த கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கண்டு வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவிருந்த பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு விஜய் பாதியிலேயே புறப்பட்டார்.
அப்போது பிரசாரம் மேற்கொள்ளும் பகுதிகளில் விஜய்யின் வாகனத்திற்கு போதிய காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றும் போக்குவரத்தைச் சரி செய்யாமல் இருப்பதால் பிரசாரம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தவெக இணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் எழுதியிருந்தார்.
முறையாக அனுமதி பெற்றும் பாதுகாப்பு இல்லை என்றும் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகளை காவல்துறையினர் உடனடியாக சரி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில், தவெக தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகக் கூறி, தவெக இணைப் பொதுச் செயலர் நிர்மல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒய் பிரிவு பாதுகாப்பில் உள்ள ஒருவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.