கேரள தேர்தல்! குமரியில் ஏப். 7 முதல் 9 வரை டாஸ்மாக் கடைகள் மூடல்!
குமரியில் மூன்று நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது பற்றி...
கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 9 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட எல்லையோரப் பகுதிகளில் மதுபானக் கடைகள் செயல்படாது என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைப்படி, பிரசாரம் நிறைவுபெறும் ஏப்ரல் 7 முதல் 9 வரை கேரளம் முழுவதும் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேரள எல்லையோர மாவட்டமான கன்னியாகுமரியில் இருந்து அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எளிதில் மதுபானங்களை வாங்கிச் செல்வார்கள் என்பதால் சில பகுதிகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:
”கேரள மாநிலத்தில் வருகின்ற 09.04.2026 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, தமிழக கேரள எல்லையான பத்மனாபபுரம் கோட்டத்திற்குட்பட்ட பின்வரும் அட்டவணையில் காணும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், தனியார் தங்கும் விடுதி மற்றும் மனமகிழ் மன்றத்துடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 07.04.2026 அன்று காலை 10.00 மணி முதல் 09.04 2026 (கேரள மாநிலம் தேர்தல் நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரையிலும் செயல்படாது என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.”