கேரளத்துக்கு ரூ. 5 லட்சம் கோடி கடன் சுமை : பிரதமர் மோடி
கேரளத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தது குறித்து...
கேரள மாநிலம் ரூ. 5 லட்சம் கோடி கடன் சுமையில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 29) தெரிவித்தார்.
இந்த கடன் இரண்டு ஆண்டுகளில் 3 மடங்காக அதிகமாகியுள்ளதாகவும், இது மக்களுக்கே பிரச்னையாக வந்து சேரும் எனவும் குறிப்பிட்டார்.
கேரளத்திற்கு ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 29) பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது பிரதமர் மோடி பேசியதாவது:
’’மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் நிலவிவரும் நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து பாஜக அரசு செயல்பட்டது. அரசு உதவியுடன் வளைகுடாவில் இருந்து நாடு திரும்பியதில் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளம்.
இத்தகைய உணர்திறன் மிகுந்த பிரச்னைகளிலும் அங்கு சிக்கியுள்ள நம் மக்களின் உயிரைப் பற்றி கவலையின்றி காங்கிரஸ் கட்சி அரசியல் செய்தது.
வளைகுடா நாடுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பில் கூட அரசியல் ஆதாயம் தேடியது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சி எவ்வாறு கீழ்த்தரமான அரசியல் செய்கிறது என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
போரால் பாதிக்கப்பட்ட இடங்களில் கேரளத்தைச் சேர்ந்த மக்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். போர் தொடங்கியதில் இருந்தே அந்த நாட்டுத் தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறேன். தொடர்பு துண்டிக்கப்பட்டதாகிவிடக் கூடாது என்பதற்காகவே இதனைச் செய்து வருகிறேன். இதனால், போர்ச்சூழலில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பை அந்தந்த நாடுகள் உறுதிப்படுத்தின.
காங்கிரஸும் இடதுசாரிகளும் எங்கு ஆட்சியில் இருந்தாலும் அந்த இடத்தை பாழாக்கிவிட்டுச் செல்கின்றனர். இடதுசாரி ஆட்சியால் திரிபுரா, மேற்கு வங்கத்திற்கு என்ன நடந்தது என்பதை நாடு அறியும். நாடு முழுவதுமே காங்கிரஸ் கட்சி என்ன செய்தது என்பதும் அனைவருக்கும் தெரியும்.
தற்போது கேரளமும் அத்தகைய அழிவை நோக்கிய பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. கேரளத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. ரூ. 5 லட்சம் கோடி கடன் சுமையில் கேரளம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். கேரளத்தை காக்க புதிய ஆட்சி அமைய வேண்டும்’’ என பிரதமர் மோடி பேசினார்.
PM Modi in Kerala slams Congress for risking lives with 'dangerous' remarks for political gains