பிரதமர் வருகைக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று (மார்ச் 1) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் செல்லும் சாலையோரம் நின்றவாறு, 'கோ பேக் மோடி' என்ற பதாகையை ஏந்தியவாறு காங்கிரஸ் கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.
தமிழகத்துக்கு வருகைப்புரிந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரியில் ரூ.1,571 கோடியில் 74 திட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமையான இன்று அடிக்கல் நாட்டினார்.
புதுச்சேரி பயணத்தை முடித்துக்கொண்டு மதுரைக்குச் சென்றார். அங்கு உள்ள முருகனின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
கோயில் சார்பில் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முருகனை தரிசனம் செய்த பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
மதுரையில் பிரதமர் தொடக்கி வைத்த திட்டங்கள்
மரக்காணம்-புதுவை பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும் மறுசீரமைக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், பொள்ளாச்சி, சோழவந்தான் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களை திறந்துவைத்து, சென்னை கடற்கரை-எழும்பூர் 4ஆவது பாதையை அவர் அர்ப்பணித்தார்.