மார்ச் 31-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி! ரூ.5,295 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!
மார்ச் 31-ல் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் செல்வது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 31 அன்று குஜராத் மாநிலத்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வரும் மார்ச் 31 அன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரூ.5,295 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைப்பதாக, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகம் சனிக்கிழமை (மார்ச் 28) அன்று தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டங்களில், பிரதமர் மோடி ரூ. 3,427.14 மதிப்பிலான 26 புதிய வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதாகவும், நிறைவடைந்த ரூ. 1,868.40 கோடி மதிப்பிலான 18 பணிகளைத் திறந்து வைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், குஜராத்தின் முக்கிய பொருளாதார நகரமான அகமதாபாத்தில் மட்டும் ரூ.4,640 கோடி மதிப்பில் 32 வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.
மேலும், காந்திநகரில் மாநகராட்சியின் கீழ் ரூ.305 கோடி மதிப்பிலான திட்டங்களும், நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் கீழ் ரூ.273 கோடி மதிப்பிலான திட்டங்களும் தொடங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடி, கடந்த 2001 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.