ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிவு!
ஆதவ் அர்ஜுனா கார் ஏறி காவலர் கால் முறிந்தது பற்றி...
திருச்சியில் தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் காவலரின் கால் முறிந்தது.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட தவெக தலைவர் விஜய் வியாழக்கிழமை பகல் 12 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து, திருச்சி மரக்கடை பகுதியில் பிரசார வாகனத்தின் நின்றபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், பிரசாரம் நிறைவடைந்து விஜய்யுடன் பிரசார வாகனத்தில் ஆதவ் அர்ஜுனா பயணித்துக் கொண்டிருந்தார். பிரசார வாகனத்தை பின்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனாவின் காரை அவரது ஓட்டுநர் ஓட்டியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவலர் சதீஷ் என்பவரின் கால் மீது ஆதவ் அர்ஜுனாவின் கார் ஏறியதில் முறிவு ஏற்பட்டது.
வலியால் துடித்த காவலரை சக காவலர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் இணைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.