முகப்பு
தமிழ்நாடு

தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை

தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளதைப் பற்றி...

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:08 PM
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை - (கோப்புப் படம்)
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன் என மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நிலவிவந்தது.

தில்லியில் நேற்றிரவு நடந்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வேட்பாளர்கள் பட்டியல், நாளைக்குள் வெளியிடப்படும் என்றும் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

Advertisement

காங்கிரஸ் போட்டியிடும் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான 27 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் இன்று (ஏப்.3) வெளியிடப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுகிறார். 

வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்குப் பின் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேர்தலுக்குப் பின்னர் என்னுடைய முழுமையான பணி ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்கு மட்டுமே. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. தேர்தல் முடிந்த பிறகு எங்களுடைய அகில இந்திய தலைமையிடம் பேசி தொகுதி வேலையும், தமிழ்நாட்டு வேலையும் மட்டுமே பார்க்கப்போகிறேன். கடந்த இரண்டு ஆண்டுகள் என்னை நம்பி கட்சியைத் தந்த, நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவிகித வெற்றியைப் பெற்றுக்கொடுத்தேன்.

மன நிறைவுடன் தேர்தல் பணியாற்றினோம். சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர்ந்து பணியாற்றுவோம். மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கும் படி ராகுல் காந்தியிடம் தெரிவித்துவிட்டேன். இனி முழுக்க முழுக்க 24 மணி நேரமும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்காக பாடுபட போகிறேன். ஸ்ரீபெரும்புதூர் பிள்ளையாக இருந்தவன் இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டில் பிள்ளையாகப் பணியாற்றினேன். நான் மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பிள்ளையாக மட்டும் செயல்பட போகிறேன்” என்றார் செல்வப்பெருந்தகை.

summary

State President Selvaprerunthagai has stated that he will not remain as the Tamil Nadu Congress President after the Assembly elections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments