முகப்பு
தமிழ்நாடு

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!

தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறைப்பிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:29 AM
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 10:31 AM

தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறைப்பிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தான் எம்.எல்.ஏ.-ஆக உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார்.

Advertisement

இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளால் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தான் சிறைவைக்கப்பட்டுள்ளதாக செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துடுள்ளார்.

அதில், “ராகுல்காந்தி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இன்று தமிழகம் வந்துள்ள நிலையில், ஹிந்தி பேசும் அதிகாரிகளுடன் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 'சோதனை' என்ற பெயரில் ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள் என்னை சட்டவிரோதமாக சிறைப்பிடித்து வைத்துள்ளனர். நான் எனது அரசியல் கடமைகளை செய்வதையும் மக்களுடன் பிரசாரத்தில் ஈடுபடுவதையும் தடுத்துவைத்துள்ளனர்.

இது அமலாக்க நடவடிக்கையாக இல்லாமல் அச்சுறுத்தல் நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது. தலைவர்களின் அரசியல் பங்கேற்பைக் கட்டுப்படுத்தி எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கவும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பதற்றமான சூழலை உருவாக்கவும் மத்திய அரசின் அமைப்புகளை அரசியல் ரீதியான அழுத்தம் கொடுக்கும் கருவிகளாகப் பயன்படுத்தி வரும் போக்கு கவலையளிக்கிறது.

இது பாதுகாக்கப்படவேண்டிய ஜனநாயகத்தின் அடிப்படை கோட்பாடுகளான சுதந்திரமாக இயங்குதல், பேச்சுரிமை மற்றும் நியாயமான அரசியல் ஈடுபாடு ஆகியவற்றின் மீது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அப்பட்டமான தாக்குதலாகும்.

சட்டத்தை நிலைநிறுத்த உருவாக்கப்பட்ட அமைப்புகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது மக்களின் நம்பிக்கையைக் குலைத்து நமது ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கிறது.

அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கையை செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகக் குரல்களை ஒடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாக நிற்பேன் என்ற எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலிமையாகப் பதிவு செய்கிறேன்.

மக்களுக்குச் சேவை செய்வதற்கும், நீதி, நேர்மை மற்றும் ஜனநாயக விழுமியங்களைக் காப்பதற்கான நமது கடமையிலிருந்து எந்தவித அச்சுறுத்தலும் நம்மைத் தடுக்க முடியாது எனத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Confined by Income Tax Officials: Selvaprerunthagai Alleges!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.