தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!
தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கு, இதுவரை 3,413 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒரே நாள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் சனிக்கிழமை மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தோ்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளா்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் (ஏப்.6) முடிவடையவுள்ளது.
இன்னும் ஒருநாள் மட்டுமே அவகாசம் இருப்பதால் சனிக்கிழமை முக்கிய கட்சிகளைச் சோ்ந்தவா்கள், சுயேச்சை என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வேட்பு மனு தாக்கல் செய்தனா். குறிப்பாக அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், அர.சக்கரபாணி, டிஆா்பி. ராஜா, சா.மு.நாசா், முன்னாள் அமைச்சா்கள் கடம்பூா் செ. ராஜூ, எஸ்.கோகுல இந்திரா உள்ளிட்டோா் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். சனிக்கிழமை இரவு நிலவரப்படி மொத்தம் 3,413 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Advertisement