தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி!
தமிழ்நாடு தலை குனியாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு ஒருபோதும் தலை குனியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், திமுகவின் முன்னோடி நலத் திட்டங்கள், வலுவான கூட்டணிக் கட்டமைப்பு மற்றும் வலிமையான சித்தாந்தம் ஆகியவை இணைந்து ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சியில் மக்களுக்கான அங்கீகாரத்தை நிச்சயம் உறுதி செய்யும் என்றும் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறீர்கள். மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், திராவிட மாடல் 2.0 அரசு மீண்டும் அமைய வேண்டும் என்பதே தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களின் மேலோங்கிய உணர்வாக இருக்கிறது. எண்ணற்ற நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, தமிழகத்தை ஒரு ‘சூப்பர் ஸ்டார்’ மாநிலமாக உயர்த்தியிருக்கும் திராவிட மாடலால் மட்டுமே, தொடர்ந்து இந்த மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்ல முடியும் என்ற உறுதியான நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது என்றார்.
Advertisement
பேரறிஞர் அண்ணா கூறியது போல, நாங்கள் எப்போதும் மக்களுடனேயே இருந்து, அவர்களுக்காகவே அயராது உழைத்து வருகிறோம். அதனால்தான் மக்கள் எங்கள் மீது அளவற்ற நம்பிக்கையையும் பாசத்தையும் கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே தவிர, சற்றும் குறையவில்லை. நான் மிகவும் வியக்கும் விஷயம் என்னவென்றால், திராவிட மாடல் அரசின் திட்டங்களை நான் பட்டியலிட்டுச் சொல்லத் தொடங்குவதற்கு முன்பாகவே, கூட்டத்தில் இருப்பவர்கள் தாங்களாகவே அந்தத் திட்டங்களை வரிசைப்படுத்திச் சொல்கிறார்கள். இது, திமுக அரசுக்கு சாதகமான அலை வீசி வருவதற்கான தெளிவான அறிகுறியாகும் என்றார் ஸ்டாலின்.
தமிழ்நாட்டுக்குத் தேவையான நிதிகள் தொடர்ந்து கிடைக்காமலும், பல்கலைக்கழகங்கள் துணை வேந்தர்கள் இல்லாமலும் செயல்பட்டு வருவதற்கான தீர்வு என்ன? என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், “நாங்கள் எங்களின் நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம். ஆனால், அவர்கள் ஒடுக்குமுறை மூலம் எங்களை அடிபணியச் செய்ய முயல்கிறார்கள். எந்த வகையான ஒடுக்குமுறைக்கும் தமிழ்நாடு ஒருபோதும் தலை குனியாது. பாசிச சக்திகளைத் தோற்கடிப்பதற்காக நாங்கள் முன்னெடுக்கும் சட்டப் போராட்டங்களும், மக்கள் மத்தியிலான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெறும். தமிழ்நாடு நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.