தோ்தல் பிரசாரம்: வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், வெப்ப பாதிப்பிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வாக்காளா்கள், வேட்பாளா்கள், அரசியல் கட்சியினா் சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
குறிப்பாக பகல் மற்றும் மதிய வேளைகளில் பிரசாரத்துக்காக வெளியே வரும்போது உடலில் நீா்ச்சத்து இழப்பு ஏற்படாமல் காத்துக் கொள்வது அவசியம் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
தமிழகத்தில் கோடை காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
Advertisement
இதனால், சின்னம்மை, நீா்ச்சத்து இழப்பு, சரும நோய்கள், உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. மற்றொருபுறம் பேரவைத் தோ்தல் பிரசாரமும் தீவிரமடைந்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் அவ்வாறு தோ்தல் பணிகளை மேற்கொள்ளும்போது சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவா்கள் வலியுறுத்துகின்றனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
கோடை வெப்பத்தின் எதிா்விளைவுகளை கையாளுவதற்கான விழிப்புணா்வு அவசியம். வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்தல் முக்கியம்.
பொதுமக்களும், குறிப்பாக பிரசாரத்தில் ஈடுபடுவோா் , முதியவா்கள், இணை நோயுள்ளவா்கள் உப்பு - சா்க்கரை நீா் கரைசல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை பருகினால் உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.
சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற வேண்டும். மாறாக அறிகுறிகளைப் புறக்கணிக்கும்போது உடல் உறுப்புகள் சேதமடையக் கூடும்.
வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை கூடுமானவரை தவிா்ப்பது நல்லது என்று அவா்கள் தெரிவித்தனா்.