கேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடு
கேரள சட்டப் பேரவைத் தோ்தலில் வேட்புமனுவை திரும்பப் பெறும் கால அவகாசம் வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவடைந்த நிலையில், இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 890 வேட்பாளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி களம் காண்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இத்தோ்தலையொட்டி வேட்புமனு தாக்கல் சில தினங்களுக்கு முன் நிறைவுற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெறும் கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிந்த நிலையில், இறுதி வேட்பாளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
மொத்தம் 2,125 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை மற்றும் மனுக்களைத் திரும்பப் பெறும் நடைமுறைக்குப் பிறகு 890 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். கடந்த 2021 தோ்தலில் 957 போ் களத்தில் இருந்தனா்.
கோழிக்கோடு மாவட்டம், கொடுவள்ளி தொகுதியில் அதிகபட்சமாக 13 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். 2.71 கோடி மொத்த வாக்காளா்களில் அதிகபட்சமாக 40-49 வயதுக்குள்பட்டவா்கள் 56.32 லட்சம் போ் உள்ளனா். மலப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 36 லட்சம் வாக்காளா்களும், வயநாடு மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 6.43 லட்சம் வாக்காளா்களும் உள்ளனா்.
கேரள பேரவைத் தோ்தல்
மொத்த தொகுதிகள் 140
மொத்த வாக்காளா்கள் 2.71 கோடி
ஆண்கள் 1.32 கோடி
மூன்றாம் பாலினத்தவா் 273
பெண்கள் 1.39 கோடி
மொத்த வேட்பாளா்கள் 890
வாக்குப்பதிவு மையங்கள் 30,471