தேர்தல் விதிமீறல்! விஜய் மீது நடவடிக்கை தேவை! - மார்க்சிய கம்யூனிஸ்ட்
விஜய் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு...
திருச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதற்கு எதிராக இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தவெக தலைவர் விஜய், நேற்று இரண்டாவது முறையாக அவரது தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.
சாலைவலம் செல்வதற்கு முன்னதாக திருச்சி வயர்லஸ் சாலை காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கே.கே. நகரில் உள்ள பள்ளிவாசல் மற்றும் கொட்டப்பட்டு பகுதியிலுள்ள ஸ்ரீபச்சநாச்சி அம்மன் கோயில் ஆகிய மும்மதத் தலங்களில் விஜய் வழிபாடு நடத்தினார்.
Advertisement
புனித அந்தோணியார் தேவாலயத்தில் சிறிது தூரம் முழங்கால் போட்டு விஜய் பிரார்த்தனை செய்தார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை விஜய் மீறியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் பெ. சண்முகம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, வழிபாடுத் தலங்களில் கட்சி அடையாளத்தை பிரதிபலிக்கும் துண்டு போன்றவற்றை அணியக் கூடாது. ஆகையால் விஜய்க்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”த.வெ.க. தலைவர் விஜய் ஒரு தேவாலயத்திற்குள் முட்டி காலில் ஊர்ந்து செல்லும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை ஞாயிறுதோறும் அவர் தேவாலயத்திற்கு செல்லும் பழக்கமுடைய வராக தெரியவில்லை. எனவே, தேர்தல் ஆதாயத்துக்காக அவர் மேற்கொண்ட நாடகக் காட்சியாக தான் இது தோன்றுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.