பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி!
கட்சி மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி தெரிவித்தது பற்றி...
பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் வெற்றிக்கு சாதகமில்லாதது என்று மேலிடத்தில் அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவுக்கு 27 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருந்தது. அதன்படி, மயிலாப்பூர், ராசிபுரம் (தனி), மொடக்குறிச்சி, தளி, ராமநாதபுரம், மானாமதுரை (தனி), உதகை, குளச்சல், அவினாசி, பத்மநாபபுரம், திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர் (தனி), ராதாபுரம், நாகர்கோயில், விளவங்கோடு, ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், பாஜகவுக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் சாதகமில்லாத தொகுதிகளை அதிமுக ஒதுக்கியிருப்பதாக கட்சியின் மேலிடத்திடம் அண்ணாமலை கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
மேலும், தனக்கு போட்டியிட விருப்பமில்லை என்றும், தனக்காக எந்தத் தொகுதியையும் ஒதுக்க வேண்டாம் என்றும் அவர் தலைமையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கிய பின்னரே, பாஜகவுக்கான தொகுதிகளை அதிமுக ஒதுக்கியதில் அண்ணாமலை கடும் அதிருப்தி அடைந்தததாக கூறப்படுகிறது.
திமுகவின் கோட்டையாகவுள்ள திருவண்ணாமலை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள், கட்சி வளர்ந்து வரும் அல்லது வளரக்கூடிய தொகுதிகள் அல்ல. இது ஆளும் திமுகவுக்கே சாதகமாக அமையும் என்றும் அண்ணாமலை மேலிடத்தில் தெரிவித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல், திமுக அமைச்சர்களின் மூன்று தொகுதிகளையும், அதிமுக 20 ஆண்டுகளாக வெற்றியே பெறாத இரண்டு தொகுதிகளையும் தமாகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டை முன்வைத்ததாக கூறப்படுகிறது.
இந்திய ஜனநாயக கட்சி மற்றும் நியூ ஜஸ்டிஸ் கட்சிக்கும் சாதகமற்ற தொகுதிகளே வழங்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை புகாரளித்ததாக தகவல்.
கோவை சிங்காநல்லூர் அல்லது அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவ்விரண்டு தொகுதிகளும் பாஜகவுக்கு ஒதுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
Constituencies not favorable to BJP! Annamalai discontent at Delhi!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.