தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்!
தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து ஜி.கே. வாசன் விளக்கம்...
பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் தமாகவுக்கு 5 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே. வாசன், தமாகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, வேட்பாளர்களை அறிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
”சைக்கிள் சின்னம் கிடைக்காததால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். பாஜகவின் நேரடிக் கூட்டணியில் இருப்பதால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மேலும், தேசிய அளவில் தாமரை இரட்டை என்ஜின் சின்னம் என்பதால் அதில் போட்டியிட முடிவு செய்தோம்.
அமைச்சர்களின் தொகுதிகளில் போட்டியிடுவதை எங்களுக்கு சாதகமாக பார்க்கிறோம். அமைச்சர்களின் ஊழல் பட்டியலை மக்களிடம் எடுத்துக் கூறி பிரசாரத்தை மேற்கொள்வோம். அமைச்சர்கள் மீதான அதிருப்தி மற்றும் எதிர்ப்பு வாக்குகள் எங்களுக்கு கிடைக்கும்.
தேர்தல் நேரத்தில் கட்சிகளுக்குள் சில சங்கடங்கள் வருவது இயல்புதான். இந்த தேர்தலில் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்று, அடுத்த தேர்தலில் எங்களின் சைக்கிள் சின்னத்தைப் பெற்று தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம்” எனத் தெரிவித்தார்.