தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டிருப்பது பற்றி...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச் சாவடி மற்றும் வாக்கு எண்ணிக்கை மையப் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
30.03.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் ரூ. 61.98 கோடி ரொக்கம், ரூ. 1.17 கோடி மதுபானங்கள், ரூ. 8.30 கோடி போதைப் பொருள்கள், ரூ. 197.35 கோடி தங்கம், வெள்ளி பொருள்கள் உள்பட மொத்தம் ரூ. 296 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, தேர்தல் பணிகளில் ஈடுபடும் வாக்குச் சாவடி பணியாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியாளர்களின் ஊதியத்தை இருமடங்கு உயர்த்தி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஊதியம் ரூ. 1,700-ல் இருந்து ரூ. 3,000 ஆகவும், வாக்குப்பதிவு அலுவலர் ஊதியம் ரூ. 1,300-ல் இருந்து ரூ. 2,600 ஆகவும், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் ஊதியம் ரூ. 850-ல் இருந்து ரூ. 1,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், வாக்கு எண்ணும் உதவியாளருக்கு ரூ. 650-ல் இருந்து ரூ. 1,400 ஆகவும், நுண் பார்வையாளருக்கு ரூ. 1,000-ல் இருந்து ரூ. 2,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.