சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏன்? திருமா விளக்கம்!
விசிக தலைவரும் மக்களவை எம்.பி.-யுமான தொல். திருமாவளவன் பேசியவை...
மக்களவை எம்பி-யாக இருக்கும்போது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்ற கேள்விக்கு எம்.பி. திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
சிதம்பரம் தொகுதி மக்களவை எம்பி-யாக உள்ள விசிக தலைவர் தொல். திருமாவளவன் இந்தமுறை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் எம்.எல்.ஏ. வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இதுபற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எம்.பி. திருமாவளவன், “ஏற்கனவே நான் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். இரண்டே கால் ஆண்டுகளில் அந்தப் பதவியை துறந்திருக்கிறேன். அதன்பின்னர், நான் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களில் பங்கேற்றதில்லை.
Advertisement
Advertisement
சட்டப்பேரவையில் இருந்து பணியாற்ற வேண்டும் என்ற வேட்கை எனக்கு நீண்ட நாள்களாக உண்டு. தமிழ்நாடு சட்டமன்றம் தான் தமிழ்நாடு அரசியலுக்கான முகம். என்னதான் நாடாளுமன்றத்தில் நாம் குரல் கொடுத்தாலும் தேசிய அளவிலான பிரச்னைகள் குறித்துப் பேசினாலும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாட்டு அரசியல் குறித்து, விளிம்புநிலை மக்களின் பிரச்னைகள் குறித்து வலுவாகப் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்ற அடிப்படையில்தான் நான் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்திருக்கிறேன். வேறு எந்த நோக்கமும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.