சென்னை திரும்பும் அதிமுக எம்எல்ஏக்கள்! அடுத்த நகர்வு என்ன?
அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை திரும்புவது பற்றி...
புதுச்சேரி சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னைக்கு திரும்ப கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் உள்ளது.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும், பெரும்பான்மைக்கு தேவையான 118 பேர் கொண்ட பட்டியல் கொடுத்தால் மட்டுமே அழைப்பு விடுக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
காங்கிரஸ் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அளித்திருக்கும் நிலையில், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவை தவெக நாடியுள்ளது.
இதனிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்கவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், புதுச்சேரியில் உள்ள சொகுதி விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்த அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் திமுக எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில், அவசர முடிவுகளை எடுக்க அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் இருந்து இன்று சென்னைக்கு திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசு பொறுப்பேற்கும் வரை அவர்கள் சென்னையில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தவெகவுக்கு ஆதரவா? இல்லையா? என்பதை இன்று மாலைக்குள் அறிவித்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.