புதுச்சேரியில் விசிக போட்டியிடும் 3 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு நிறுத்தம்! - தொல். திருமாவளவன்
புதுச்சேரியில் விசிக போட்டியிடும் 3 தொகுதிகளில் வாக்கு சேகரிப்பு நிறுத்தம் என தொல். திருமாவளவன் அறிவிப்பு...
புதுச்சேரியில் விசிக போட்டியிடும் மூன்று தொகுதிகளில் வாக்கு சேகரிப்பை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.
வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பிறகு கூட்டணியில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் ஞாயிற் றுக்கிழமை கூறியதாவது:
Advertisement
புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் பேச்சு காலதாமதமானதால், விசிக 4 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தோம். வேட்புமனு தாக்கல் முடிந்த பிறகு சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, இப்போது உழவர்கரை தொகுதியில் மட்டும் கூட்டணியில் போட்டியிடுவது என்றும், நெட்டப்பாக்கம், ஊசுடு, ஏனாம் ஆகிய மூன்று தொகுதிகளில் வாக்கு சேகரிப்பதை நிறுத்துவது என்றும் விசிக முடிவு செய்துள்ளது.
புதுச்சேரியில் எங்கள் கூட்டணியில் இடதுசாரிகளுக்கும் இடம் ஒதுக்கத்தான் பேச்சுவார்த்தை நடந்தது. இப்போது கூட்டணியில் இடதுசாரிகள் இல்லாமல் போனது வருத்தம்தான். இருப்பினும், இதனால் கூட்டணி வெற்றி பாதிக்கப்படாது.
புதுச்சேரியில் கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரித்தால் அக்கட்சியின் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரி இலச்சினையை மாற்றப் போவதாக அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மதவாத அரசியலுக்கு இடமில்லை. புதுச்சேரியில் பாஜக படுதோல்வி அடையும் என்றார் திருமாவளவன்.
தமிழகத்தில் பிரசாரம்! தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் 14-ஆம் தேதி வரை தொடர்ந்து தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளேன். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ‘இண்டி' கூட்டணி ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி இப்போது ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இதெல்லாம் கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.
தமிழக ஆளுநர் மீது புகார்: தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அடையாளம் உள்ள அமைப்புகளின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கும், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் புகார் அனுப்பியுள்ளோம்.
இந்தப் பேட்டியின்போது விசிக புதுச்சேரி முதன்மைச் செயலர் பெரு. அரிமா தமிழன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.