எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்
திராவிடக் கொள்கை தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி என மு.க. ஸ்டாலின் விமர்சனம்...
எத்தகைய வடிவத்திலும் பாஜகவால் தமிழ்நாட்டிற்குள் வர முடியாது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 14) தெரிவித்தார்.
திராவிடக் கொள்கை தெரியாத, அண்ணாவைப் பற்றி தெரியாத பழனிசாமியை கையில் வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் வந்துவிடலாம் என பாஜக நினைப்பதாகவும், திமுக உள்ளவரை அது நடக்காது எனவும் குறிப்பிட்டார்.
வேலூர் மாவட்டம் கந்தனேரியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப். 14) பிரசாரம் மேற்கொண்டார்.
Advertisement
பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
''தமிழகம் உள்பட தென்மாநிலங்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வளர்ச்சியை நோக்கி நடைபோட வைத்த நம்மை தண்டிக்க முயற்சி நடக்கிறது. சதித் திட்டத்தை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் திட்டமாக நிறைவேற்ற துடிக்கிறது பாஜக.
பியூஷ் கோயலுக்கு நாவடக்கம் தேவை. தமிழ்நாட்டு பாஜகவுக்கு மட்டும்தான் நீங்கள் பொறுப்பாளர். நாவை அடக்கிப் பேசுங்கள். மரியாதை கொடுத்தால் மட்டும்தான் மரியாதை கிடைக்கும். தன்மானம் மீது கை வைத்தால் கடும் பதிலடி கொடுக்கப்படும்.
பெரியார், அண்ணா, கருணாநிதியின் உருவம் நான். நெருப்போடு விளையாடாதீர் பிரதமரே. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் திமுக உழைக்கிறது.
வேலூர் மாவட்டத்துக்கு எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கலை கொண்டுவந்துள்ளோம்.
குடியாத்தம் முதல் ஏரிக்கரை வரை சுற்றுச்சாலை, வடுகத்தூர் வரை 50 கோடி மதிப்பிலான 4 வழிச் சாலை, தொழிலாளர்களுக்காக கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி, 45 கோடி மேம்பாட்டில் காட்பாடி ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடங்க இருக்கிறது.
அணைக்கட்டு பகுதியில் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
சத்துவாச்சாரி வரையிலான மேம்பாலப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. இவ்வாறு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறோம்.
உள்கட்டமைப்பில் மாவட்டங்கள் வளர்ச்சி அடைய வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வய்ப்பு கிடைக்க வேண்டும். மகளிர் வாழ்வு செழிக்க வேண்டும் . மொத்தத்தில் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் வாழ்வு செழிக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே கையெழுத்து போடுகிறேன்.
நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எண்ணற்ற பிரச்னைகள். ஆனால், தமிழ்நாட்டின் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர். இதற்கு திமுகதான் காரணம்.
திமுக தோழமை கட்சி இயக்கங்கள், சிறுபான்மை மக்களின் உண்மை காவலனாக இருக்கும். சிறுபான்மையினருக்காக திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக தமிழ்நாடு ஹஜ் இல்லக் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு ஹஜ் குழுவுக்கான மானியம் ரூ. 80 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினருக்கு வழங்கி வந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்திவிட்டது. இதனால், அரசுப் பள்ளியில் படிக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு ரூ. 1000 கல்வி உதவித் தொகையை திமுக வழங்கியது. 159 கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையின கல்விச் சான்றிதழ் வழங்கியுள்ளோம்.
தொன்மையான பள்ளி வாசல்கள், தர்காக்களை புனரமைக்க 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினருக்கு நலத்திட்டங்களை செய்வதோடு மட்டுமின்றி, அவர்களுக்கு அநீதி ஏற்பட்டால், அங்கு தோழமையுடன் நிற்பதும் மு.க. ஸ்டாலின்தான்.
பச்சோந்திக்கே போட்டியாக, கட்சி மாறுகிறார் எடப்பாடி பழனிசாமி. பழனிசாமியின் துரோகத்துக்கு சிறுபான்மை மக்கள் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் சிஐஏ சட்டம் வந்திருக்காது. பாஜகவுக்கு ஆதரவாக இருந்து தமிழக சிறுபான்மை மக்களை எடப்பாடி வஞ்சித்துள்ளார்.
பழனிசாமி பாடம் கற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் பாஜகவை சுமந்துகொண்டு தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். எங்களுக்கு கூட்டணி வேறு, கொள்கை வேறு எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அப்படி என்ன கொள்கை வைத்திருக்கிறார் எடப்பாடியார். அவருக்கு திராவிடமும் தெரியாது, அண்ணாவும் தெரியாது. அதனால்தான் எடப்பாடி பழனிசாமியை கையில் வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிக்க வந்துவிடலாம் என பாஜக நினைக்கிறது.
அகர முதல தொட்டு... தாடிக் கிழவன் பிளட்டு... தமிழ்நாட்டு மக்களிடம் உள்ளது. அதனால் எந்த வடிவிலும் பாஜக தமிழ்நாட்டிற்குள் வர முடியாது.'' என மு.க. ஸ்டாலின் பேசினார்.