மு.க. ஸ்டாலினுடன் சேர்ந்து இபிஎஸ் ஆட்சியமைக்க முயன்றதாலேயே அதிமுகவில் பிரச்னை: நிர்மல்குமார்
திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க முயற்சித்ததாலேயே அதிமுகவில் பிரச்னை உண்டானதாக அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு
திமுகவுடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி ஆட்சியமைக்க முயற்சித்ததாலேயே அதிமுகவில் பிரச்னை உண்டானதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது, "ஆளுநர் மாளிகையின் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடாமல், வந்தே மாதரம் பாடப்படுவது கண்டனத்துக்குரியது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்னர், மேற்கு வங்கத்தில் மட்டும் மாற்றிப் பாடினார்கள். அவர்களுக்கு எங்கெல்லாம் அரசியல் தேவைப்படுகிறதோ, அங்கெல்லாம் அரசியல் செய்கின்றனர்.
Advertisement
Advertisement
தமிழகத்தில் ஆளுநர் மாளிகையாக இருந்தாலும் சரி, ஆளுநர் தொடர்பான இடங்களில் நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதன்மையாகப் பாடப்பட வேண்டும்.
இதுதான் எங்களின் முதன்மையான கோரிக்கை. இதனைச் செவிசாய்த்து பிரதமரும், மத்திய அரசும் மாற்றுவார்கள்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, அதிமுக தலைவர்கள் சிலர் தவெகவில் இணைந்தது குறித்து அவர் பேசியதாவது, "அதிமுகவின் கட்சியினுள் தனிப்பட்ட காரணங்களால், கட்சியில் தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால், அங்கிருந்து விலகி ராஜிநாமா செய்தபிறகுதான், தவெக தலைவர்களைச் சந்தித்தனர். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.
எடப்பாடி பழனிசாமியும் மு.க. ஸ்டாலினும் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று அவர்கள் எப்போது தொடங்கினார்களோ அப்போதுதான் பிரச்னையும் உண்டானது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுகவுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டு, திமுகவுக்கு எதிராக அரசியல் செய்தவர்கள். ஆனால், இப்போது திமுகவுடன் சேர்ந்தே ஆட்சியமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டதால், அதனை எதிர்த்து சிலர் வெளிவந்தனர்" என்றும் நிர்மல்குமார் தெரிவித்தார்.