அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்
ஈரோடு பிரசாரத்தில் ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக...
அதிமுக யாருக்கும் அடிமையில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 19) தெரிவித்தார்.
பாஜகவுக்கு அடிமையாக அதிமுக இருப்பதாக ராகுல் காந்தி பேசியிருந்த நிலையில், இபிஎஸ் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 19) பிரசாரத்தில் ஈடுபட்டார்.
Advertisement
Advertisement
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
பாஜக பிடியில் அதிமுக இருப்பதாக ராகுல் காந்தி மேடையில் பேசுகிறார். அதிமுக யாருக்கும் அடிமையில்லை என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். தேர்தலை சந்திக்க திராணியில்லாத முதல்வர் மத்திய அரசை எதிர்க்கிறார்
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுக்கு மாறிவிட்டார். திமுக பற்றி பேசினால் உடனே பதில் அளிப்பார். மக்கள் பிரச்னைகளை அவையில் பேசாமல் திமுக அரசை தாங்கிப்பிடிக்கிறது காங்கிரஸ். ஆனால், அது தெரியாமல் அதிமுகவை ராகுல் குறை கூறுகிறார்.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகத்தைச் சேர்ந்த துணை முதல்வரை பிரசாரத்திற்கு அழைத்து வருகிறார் மு.க. ஸ்டாலின். சுயநலத்திற்காக, குடும்பத்துக்காக ஆட்சி செய்கிறது திமுக.
நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை மு.க. ஸ்டாலின் எதிர்த்து நிற்கிறார். அவையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸும் திமுகவும் வாக்களித்ததால் அந்த மசோதா நிறைவேறவில்லை. பெண்கள் இதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும்.
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டிற்கான தொகுதிகள் குறைந்துவிடும் என்கிறார் மு.க. ஸ்டாலின். ஆனால், இது குறித்து அமித் ஷா விளக்கம் அளித்தார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு 39 தொகுதிகளில் இருந்து 59 தொகுதிகள் கிடைக்கும். ஆனால், ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்து வீரவசனம் பேசுகிறார். தமிழ்நாட்டு பெண்கள் இதனை மறக்கக் கூடாது.
இஸ்லாமியர்களுக்கு பல நன்மைகள் செய்த கட்சி அதிமுக. ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கான நிதியை இரு மடங்காக உயர்த்தினோம். வக்ஃப் வாரியத்திற்கு நிதி வழங்கப்பட்டது. சிறுபான்மை பொருளாதார முன்னேற்றத்திற்காக தனி இயக்கத்தை அதிமுக அமைத்தது.
அதிமுக ஆட்சி வரும்போது நிறைய திட்டங்கள் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் வரிகள் அதிகரித்து மக்கள் தலையில் சுமையாகி நிற்கிறது. இவற்றை அதிமுக ஆட்சி சரி செய்யும். முதற்கட்டமாக அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
TN Election 2026 AIADMK is subservient to no one edappadi palanisamy responds to Rahul.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.