அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டி? இபிஎஸ் விளக்கம்!
அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று(மார்ச் 23) இறுதி செய்யப்பட்டு கையெழுத்தானது.
அதன்படி, பாஜகவுக்கு 27 தொகுதிகள், அன்புமணி தரப்பு பாமகவுக்கு 18 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:
தேசிய ஜனநாயக் கூட்டணி தொகுதிப் பங்கீடு சுமூகமாக நடைபெற்றது. எங்கள் கூட்டணி வெற்றிக் கூட்டணி, நிச்சயம் 210 தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே எங்கள் நோக்கம்.
நாங்கள் தில்லி சென்றாலே பயப்படுகிறார் ஸ்டாலின். மேலும், அவதூறு பரப்புவதை ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார்.
கருத்துகளை பரிமாறவே தில்லிக்கு சென்றோம். திமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் இறுதியாகவில்லை. வேண்டுமென்றே திமுக தலைவர், திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் எங்கள் மீது அவதூறு கருத்துகளைப் பரப்புகின்றனர்.
பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, முழுமையான தொகுதிப் பங்கீடு விவரம் தெரிவிக்கப்படும்.
தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பிற கூட்டணிக் கட்சிகளுடன் இன்றிரவுக்குள் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்று அறிவிக்கப்படும். இரவுக்குள் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படும். அதன்பின்னர், அதிமுக எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்த விவரம் தெரியவரும்” என்றார்.