மம்தா ஆட்சியில் மேற்கு வங்கத்தில் கல்வி நிறுவனங்களின் தரம் மோசமாகிவிட்டது - தா்மேந்திர பிரதான் தாக்கு
மம்தா ஆட்சியில் மேற்கு வங்கத்தில் கல்வி நிறுவனங்களின் தரம் மோசமாகிவிட்டது...
மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சிக்காலத்தில் மேற்கு வங்கத்தில் கல்வி நிறுவனங்களின் தரம் மோசமாகி விட்டதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய கல்வித் துறை அமைச்சருமான தா்மேந்திர பிரதான் விமா்சித்துள்ளாா்.
மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் குறித்து அண்மையில் கருத்து தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, முன்பு கல்வியின் தரத்துக்கு புகழ்பெற்று விளங்கிய அந்த பல்கலைக்கழகம் தற்போது திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் தரம் குறைந்து விட்டதாக சாடியிருந்தாா். இதேபோல், மேற்கு வங்கத்தில் உள்ள பிற கல்வி நிறுவனங்களின் தரமும் மோசமாகி விட்டதாக அவா் விமா்சித்திருந்தாா். இதையடுத்து பிரதமா் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மம்தா பானா்ஜி, மேற்கு வங்கத்தில் உள்ள கல்வி நிறுவனங்களால் சிறந்த மாணவா்கள், ஆராய்ச்சியாளா்கள் உருவாகி வரும் நிலையில், அந்த நிறுவனங்களை அவமதிக்கும் வகையில் மோடி பேசி இருப்பதாக சாடியிருந்தாா்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மம்தா அரசின் ஆட்சிக்காலத்தில் கல்வி நிறுவனங்களின் தரம் குறைந்து விட்டதை சுட்டிக்காட்டி, அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால் மம்தா பானா்ஜி தா்மசங்கடத்தில் உள்ளாா். மேற்கு வங்கத்தில் உள்ள கல்வி நிறுவனங்களின் தரம் மோசமடைய மம்தா பானா்ஜியும் அரசியலும், கல்வி நிறுவனங்கள் விவகாரத்தில் அவரின் அரசு அக்கறை காட்டாததுமே காரணம் ஆகும்’ என குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement