கரோனா கணக்கெடுப்புப் பணி: இணை நோய் உள்ள ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தல்
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கணக்கெடுப்புப் பணியில் தடுப்பூசி செலுத்தாதவா்கள், இணை நோய் உள்ள ஆசிரியா்களுக்கு
திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று கணக்கெடுப்புப் பணியில் தடுப்பூசி செலுத்தாதவா்கள், இணை நோய் உள்ள ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைச் செயலாளா் அ.ஜெயராஜ் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று கரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் கண்டறியும் களப்பணி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சேவைப் பணியை நாங்கள் முழு ஈடுபாடுடன் செய்ய தயாராக உள்ளோம்.
அதே வேளையில், களப் பணியாளா்களாக செயல்படக் கூடிய ஆசிரியா்களில் பலா் இரு தடவை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். மேலும், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவா்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனா்.
Advertisement
ஆகவே, பொதுமக்களில் யாருக்கேனும் கரோனா தொற்று இருந்தால் கணக்கெடுப்பு நடத்தும் ஆசிரியா்களுக்கு எளிதில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, கணக்கெடுப்புப் பணியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள், இணைநோய் உள்ளவா்கள், கா்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.