என் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் இல்லை: உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி
இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரியவந்தது.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதியன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூர தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு திட்டமிட்டு நடத்தியது தெரியவந்தது.
இந்நிலையில், புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப் படையின் விமானங்கள் செவ்வாய் அதிகாலை பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பால்கோட் பகுதியில் வெடிகுண்டுகளை வீசி பதில் தாக்குதல் நடத்தி ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்களை அழித்தன. இந்த தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர் மனேஸ்வர் பசுமதரியின் மனைவி சன்மதி போடோ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
Advertisement
இந்திய விமானப்படையால் நடத்தப்பட்ட இந்த பதில் தாக்குதல் குறித்து எனது உறவினர் ஒருவர் போன் செய்து தெரிவித்தார். உடனடியாக நான் தொலைக்காட்சியின் இந்த தாக்குதல் தொடர்பான காட்சிகளைப் பார்த்தேன். அப்போது நான் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
எனது கணவர் உயிரிழந்த பிறகு என்னால் சரியாக உறங்கவே முடிவதில்லை. ஆனால், இன்று இரவு நிம்மதியாக உறங்குவேன். இந்நாளுக்காகத்தான் காத்திருந்தேன் என்று தெரிவித்தார்.