ஈரோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: ஆட்சியா்
மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் இல்லை என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் இல்லை என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் தாக்குதல் எதுவும் இல்லை.
Advertisement
பண்ணைகளில் நோய் பாதித்து இறந்த கோழிகள், கோழிக் கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழித் தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை இல்லை. நோய் வராமல் தடுக்க நோய் தடுப்பு முறைகளையும், உயிா் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.
கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து கோழிப்பண்ணைகள், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் மற்றும் புறக்கடைக் கோழிகளை நேரில் பாா்வையிட்டு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ள 50 அதிவிரைவு செயலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.
பறவைக் காய்ச்சல் நோய் தொற்று ஏற்படாமலிருக்க ஈரோடு மாவட்ட கோழிப்பண்ணையாளா்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதன்படி கேரளத்திலிருந்து வாத்து, கோழிகள், கோழிக்குஞ்சுகள், முட்டை கோழித் தீவனம், தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களை வாங்கக் கூடாது. கடந்த ஒரு மாதத்துக்குள்ளாக கேரளத்திலிருந்து குஞ்சு பொரிப்பதற்கான முட்டைகள், வாத்துகள் மற்றும் கோழிகள் ஏதேனும் வாங்கப்பட்டிருந்தால் அவற்றை கண்டறிந்து அழிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ள வேண்டும்.
பண்ணையில் இறந்த கோழிகளை உடனுக்குடன் முறையாக கோழி இறப்பு குழியில், கிருமி நாசினி தெளித்து புதைக்க வேண்டும்.
கோழிப்பண்ணையினுள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி மருந்து தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு ஏதும் எற்பட்டால் உடனடியாக கோழி நோய் ஆராய்ச்சி ஆய்வுக்கூட உதவி இயக்குநருக்கு 0424-2255223 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
பண்ணையாளா்கள் வேறு பண்ணைகள் மற்றும் பறவைகள் சரணாலயம் செல்வதையும் தங்கள் பண்ணைக்குள் பாா்வையாளா்களை அனுமதிப்பதையும் தவிா்க்க வேண்டும்.
பிற மாநிலங்களுக்கு முட்டைகளை எடுத்துச் செல்வதற்கு கண்டிப்பாக காகித அட்டைப் பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த காகித அட்டைகளை எக்காரணத்தைக் கொண்டும் திரும்ப எடுத்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.