8.4.1976: 73 பேருடன் விமானம் கடத்தல்; பணம் தராவிடில் கொல்லப்போவதாக மிரட்டல்
73 பேருடன் விமானம் கடத்தப்பட்டது பற்றி...
ஹாங்காங், ஏப்: 7- பிலிப்பைன்ஸ் தலைநகரான மணிலாவிலிருந்து அந்நாட்டின் தென் பகுதியிலுள்ள ஒரு ஊருக்குப் போய்க் கொண்டிருந்த விமானத்தை ஆயுதபாணிகளான மூவர் கைப்பற்றிக் கொண்டு, பயணிகள், விமான சிப்பந்திகள் உள்ளிட்ட 73 பேரை பணயக் கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டு, தங்களுடைய கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யாவிடில் பயணிகளைக் கொன்றுவிடப் போவதாக மிரட்டினர்.
இந்த ஆசாமிகள் நடுவழியில் விமானத்தைக் கைப்பற்றிக் கொண்டு மணிலாவுக்கே விமானத்தைத் திருப்பிவிடுமாறு உத்தரவிட்டனர்.
3 லட்சம் டாலர் பணம் தருவதுடன், பிலிப்பைன் சிறைகளில் உள்ள 3 கைதிகளை விடுவிக்க வேண்டுமென்பது இவர்களுடைய கோரிக்கையாகும். தவிர, தாங்கள் விரும்பும் இடத்துக்கு விமானத்தை ஓட்டிச் செல்ல ஒரு விமானியையும் அனுப்ப வேண்டுமென்று கோருகிறார்கள்.
Advertisement
2 மணி நேரத்தில் இந்தக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யாவிடில், பயணிகளைக் கொல்லத் தொடங்கப் போவதாக எச்சரித்திருக்கிறார்கள். பயணிகளைக் கொல்லாமல் விடும்படிச் செய்ய, அதிகாரிகள் முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது.
மாநில பட்ஜெட்டுகளில் பிரசாரத்திற்கு 1% நிதி: தகவல் அமைச்சர்கள் முடிவு
புதுடில்லி, ஏப். 7- தேசீயத் திட்டங்களை பல வழிகளில் பிரசாரம் செய்ய மத்திய, மாநில பிரசுர இலாகாக்கள் முயற்சி எடுத்துக் கொள்ளும்.
நேற்றுடன் மாநில தகவல் அமைச்சர்கள் இங்கு முடிவுற்ற மகாநாட்டில் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது. மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் வி. சி. சுக்லா தலைமை வகித்தார். இதற்கு அகில இந்திய ரேடியோ விரிவாக பயன்படுத்தப்படும். மற்றும் சினிமா ஸ்லைடுகள், டெலிவிஷன், விளம்பர போர்டுகள் முதலியன பயன்படுத்தப்படும் என்றார்.
மாநில பட்ஜெட்டில் 1 சதம் தகவல், பிரசாரத் துறைக்கு செலவிடப்பட வேண்டும் என்று மாநில மந்திரிகள் முடிவு செய்திருப்பதை இவர் வரவேற்றார். நிலச்சீர்திருத்தம், நகர்புற நில உச்சவரம்பு, விவசாய தொழிலாளர் குறைந்தபட்சக் கூலி நிர்ணயம், ஏழைகளுக்கு வீட்டு மனை வழங்குதல், பயிற்சியாளர் திட் டம், மாதர்கள் நலன், வரதட்சிணை ஒழிப்பு, குடும்பக் கட்டுப்பாடு, குடும்ப நல திட்டங்கள், ஏழைகளுக்கு உதவி, தொழில் துறையில் தொழிலாளர் பங்கு முதலியன பற்றி பிரசாரம் செய்யப்படும்.