புதுடில்லி, பிப். 24 - சென்னை நகரில் செயற்கைக் கோள் தகவல் தொடர்பு நிலையம் ஒன்று அமைக்கப்படும். இப்போது விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு செயற்கைக் கோளுடன் இந்த நிலையம் தொடர்புகொண்டு ஆய்வு நடத்தும்.
ஈசிம்பனன் என்னும் இந்த செயற்கைக் கோளை, பிரான்சும் ஜெர்மனியும் கூட்டாகச் சேர்ந்து விண்வெளியில் பறக்கவிட்டிருக்கின்றன. இது ஒரு தகவல் தொடர்பு செயற்கை கோளாகும். இதனுடன் சென்னை செயற்கைக் கோள் தகவல் தொடர்பு நிலையம் தொடர்பு கொண்டு சோதனைகள் நடத்தும்.
இந்த சோதனைகள் மூன்று வகைப்படும். முதலாவது சோதனையில் ஒரு "டிரெய்லர்" வண்டியில் தகவல் தொடர்பு சாதனங்கள் வைக்கப்பட்டு செயற்கைக் கோளுடன் தொடர்பு கொள்ளப்படும். இந்த டிரெய்லரை எங்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்ல முடியும். தீவுகளுக்கும். திட்டப் பகுதிகளுக்கும் கூட கொண்டு செல்லலாம். இந்த டிரெய்லரை ஒரே இடத்தில் நிலையாக பொருத்தியும் ஆராய்ச்சி செய்யலாம்.
இரண்டாவது சோதனையின் கீழ், தகவல் தொடர்பு சாதனங்கள் ஒரு விமானத்தில் கொண்டு செல்லப்படும். அங்கிருந்தவாறே, செயற்கைக் கோளுடன் தொடர்பு கொள்ளப்படும்; மிகவும் மோசமான சூழ்நிலைகளிலும் நல்ல பதிவுகள் ஏற்படும் அளவில், சாதனங்கள் தயாரிக்கப்படும்.
மூன்றாவது சோதனையின் கீழ், அந்த செயற்கைக் கோளிலிருந்து ஒரே சமயத்தில் 12 ஒளி அலைகளில் அனுப்பப்படும் வெவ்வேறு டெலிவிஷன் ஒளிபரப்புகளை சென்னையில் இருந்தவாறு பதிவு செய்து, டெலிவிஷன் பெட்டிகளில் ஒளிபரப்ப வகை செய்யப்படும்.
இந்த 3 வித சோதனைகளும், இரண்டு கட்டங்களில் நடத்தப்படும். முதலாவது கட்டசோதனைகள் 1977 முதல் 1978 வரை நடக்கும். இரண்டாவது கட்ட சோதனைகள் 1978 முதல் 1979 வரையில் நடக்கும்.
சென்னையில் அமைக்கப்படும் இந்த செயற்கைக் கோள் தகவல் தொடர்பு நிலையம், தபால் தந்தி இலாகாவின் பொறுப்பின் கீழ் இயங்கும். இந்தத் திட்டங்களுக்காக, ரூ. 90 லட்சத்தை அந்த இலாகா ஒதுக்கீடு செய்யும். இந்த திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக நிறைவேற்றுவதற்காக டில்லி தபால் தந்தி இலாகா ஆய்வு நிலையத்தில் ஒரு திட்டக் குழு தனியாக அமைக்கப்படுகிறது. ...
புது டில்லி, பிப். 25 - மார்ச் முதல் தேதியிலிருந்து பல தபால், தந்தி, டெலிபோன் கட்டணங்கள் உயரும்.
தபால் கார்டுகள், கவர்கள், இன்லண்ட் கவர்கள் ஆகியவற்றின் கட்டணங்களில் மாறுதல் இல்லை.
பதிவுக் கட்டணம், மணியார்டர் கட்டணம், வி. பி. பி. கட்டணம், தந்தி, டெலிபோன் கட்டணங்கள் அதிகரிக்கும் என்று இன்று ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூறியது.
தபால் தந்தி இலாகாவின் செலவு அதிகரிப்பதைச் சரிக்கட்ட இது செய்யப்படுவதாக அறிவிப்பு கூறியது.
கட்டண உயர்வால் அடுத்த ஆண்டு இலாகா நிகர லாபத்தை எதிர்பார்க்கிறது. முன்பு நஷ்டம் எதிர்பார்க்கப்பட்டது.
முக்ய மாறுதல்கள் வருமாறு:- ஒரு பொருளுக்கு இப்பொழுது பதிவுக் கட்டணம் ரூ. 1.25 ஆக இருப்பது ரூ. 2-க்கு உயரும்.
மணியார்டர் கட்டணம் ரூ. 20 வரை ஒவ்வொரு பத்து ரூபாய்க்கும் 25 பைசவாக இருக்கும். அதற்கு மேல் ஒவ்வொரு 20 ரூபாய்க்கும் கட்டணம் 50 பைசா. வி.பி.பி. கட்டணம் ரூ. 10 வரை 50 பைசா, ரூ. 10-க்கு மேல் ரூ. 20-க்கு அதிகப்படாத தொகைக்கு ரூ.1, ரூ. 20-க்கு மேற்பட்ட தொகைக்கு ரூ. 1.50.
இன்ஷியூரன்ஸ் கட்டணம் ரூ. 100 வரை ரூ.1,ரூ.5000 வரை ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 50 பைசா, ரூ. 5000- க்கு மேற்பட்ட தொகைக்கு ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் கட்டணம் ரூ. 3. ...
... டெலிபோன கட்டணம்
ஆண்டு ஒன்றுக்கு இலவசமாக அனுமதிக்கப்படும் டெலிபோன் "கால்களின்" எண்ணிக்கை 1200-லிருந்து 1000-க்கு குறைக்கப்படுகிறது.
ஒவ்வொரு கூடுதல் "காலுக்கு" கட்டணம் 25 பைசாவிலிருந்து 30 பைசாவுக்கு உயர்த்தப்படுகிறது.
டெலிபோன் லைனுக்கு ஆண்டு வாடகை ரூ.100 அதிகரித்து 500- லிருந்து ரூ.600 ஆகும்.
டெலிபோனை ஓரிடத்திலிருந்து வேறு ஒரு இடத்துக்கு மாற்ற கட்டணம் 10 ரூபாயாகும். புதிய டெலிபோன் இணைப்பு கொடுப்பதற்கு கட்டணமும் 100 ரூபாயாகும்.
டெலக்ஸ் லைன் கட்டணம் ஆண்டுக்கு ரூ. 2000 ரூபாயாக இருப்பது 3000 ரூபாயாக உயரும். ...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.