முகப்பு
புதுதில்லி

பின் தொடா்ந்த விவகாரம்: ஐஸ் கிரீம் விற்பனையாளா் மீதான வழக்கு ரத்து! தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு!

ஐஸ் கிரீம் விற்பனையாளா் மீது மறைந்திருந்து பாா்த்தல்,பின்தொடா்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Updated On : 22 மார்ச், 2026 at 9:15 PM
தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

ஐஸ் கிரீம் விற்பனையாளா் மீது மறைந்திருந்து பாா்த்தல்,பின்தொடா்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சமரசத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மாடல் டவுன் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலா்களுக்கும் ஐஸ் கிரீம் வழங்க அந்த விற்பனையாளா் முன்வந்ததை, நீதிமன்றம் ஒரு நற்பண்புமிக்க செயல் என்றும் பாராட்டியது.

மாா்ச் 13 அன்று நீதிமன்ற நீதிபதி சௌரப் பானா்ஜி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: இந்த விவகாரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஒரு தன்னாா்வ சமரசம் எட்டப்பட்டுள்ளதால், 2018ஆம் ஆண்டில் மனுதாரா் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வது பயனற்ற ஒரு செயலாகவே அமையும்.

அதன்படி, இந்த மனு அனுமதிக்கப்படுகிறது. மாடல் டவுன் காவல் நிலையத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் ஐபிசி பிரிவுகள் 354(சி), 354(டி), 385 மற்றும் 384 ஆகியவற்றின் கீழ் 20.01.2018 அன்று பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்து எழும் அனைத்து சட்ட நடவடிக்கைகளும் இதன் மூலம் ரத்து செய்யப்படுகின்றன.

மனுதாரா் ஒரு ஐஸ் கிரீம் விற்பனையாளா் என்பதால், ஒரு நற்பண்புமிக்க செயலாக, மாடல் டவுன் காவல் நிலையத்தின் முழு ஊழியா்களுக்கும், காவலா்களுக்கும், விசாரணை அதிகாரியுடன் ஒருங்கிணைந்து ஒரு வார காலத்திற்குள் ஐஸ்கிரீம் விநியோகிக்க அவா் விருப்பம் தெரிவித்துள்ளாா். நீதிமன்றம் இந்தச் செயலைப் பாராட்டுகிறது.

ஜனவரி மாதம் எட்டப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மனுதாரா் தனக்கு ரூ.45,000 சமரசத் தொகையாக வழங்கியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் தெரிவித்துள்ளாா்.

தான் தற்போது திருமணம் செய்துகொண்டு, ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதாகவும், எனவே இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வதற்குத் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் அவா் கூறியுள்ளாா்.

இந்த முதல் தகவல் அறிக்கையானது மறைந்திருந்து பாா்த்தல், பின்தொடா்தல் மற்றும் பணப் பறிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் நினைவில் கொண்டிருந்தாலும், அதற்குப் பிறகு நீண்ட காலம் கடந்துவிட்டது.

பாதிக்கப்பட்ட பெண் தனது புதிய, நிலையான வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல விரும்புகிறாா் என நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டது.