புதுடில்லி, ஜன. 24 - மிஸா திருத்த மசோதாவை இன்று ராஜ்யசபை நிறைவேற்றியது. இந்த மசோதா கடந்த வியாழனன்று லோக்சபையில் நிறைவேறியது. எனவே இத்துடன், காரணம் கூறாமல் எவரையும் தடைக்காவலில் வைக்க அரசுக்கு அதிகாரம் பார்லிமெண்டால் அளிக்கப்பட்டுள்ளது.
இன்று ராஜ்ய சபை உள்பாதுகாப்பு (திருத்த) மசோதா (மிஸா திருத்த மசோதா) மீது விவாதம் தொடங்கியது.
லோக் சபையில் நிறைவேறிய இந்த மசோதாவை ராஜ்ய சபை விவாதத்துக்கெடுத்துக் கொள்ள வேண்டுமென பிரேரித்த உள்துறை மந்திரி திரு. கே. பிரம்மானந்த ரெட்டி, “தடைக்காவலில் வைப்பதற்கான காரணங்களை கோர்ட்டிடமிருந்து பாதுகாக்கவும், நபர்களைத் தடைக்காவலில் வைக்க உள்ள சில சட்டரீதியான சிரமங்களை நீக்கவும் இம்மசோதா கொண்டு வரப்பட்டது” என்றார்.
தடைக்காவலில் வைக்கப்படுவதற்கான காரணங்கள் அரசாங்க ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்றார்.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் 17 (ஆம் தேதி) ராஷ்டிரபதி பிறப்பித்த மிஸா மூன்றாம் திருத்த அவசரச் சட்டத்தை ஆட்சேபிக்கும் தீர்மானம் ஒன்றை திரு. இந்திரதீப் சின்ஹா (வலது கம்யூ.) கொணர்ந்தார்.
அடுத்த, கடந்த ஆண்டு அக்டோபர் 16 (ஆம் தேதி) ராஷ்டிரபதி பிறப்பித்த மிஸா நான்காம் திருத்த அவசரச் சட்டத்தை ஆட்சேபிக்கும் தீர்மானத்தை திரு. கிருஷ்ணகாந்த் (சுயே) கொணர்ந்தார்.
மேற்குறித்த இரு அவசரச் சட்டங்களுக்குப் பதிலாக அரசு தரப்பில் கொண்டு வரப்பட்ட இம்மசோதாவை இருவரும் எதிர்த்தனர். தடைக்காவலில் வைக்கப்பட்ட ஒவ்வொரு நபர் விஷயமும் இரு மாதங்களுக்கு பின்பு மறுபரிசீலனை செய்யப்பட ஆலோசனை போர்டுகள் அமைக்க வேண்டினார் டாக்டர் ராம்கிருபால் சின்ஹா (ஜ. ச.). ...
... மசோதா மீதான விவாதத்துக்கு உள்துறை மந்திரி திரு. பிரம்மானந்த ரெட்டி பதிலளிக்கையில், தேசத்தின் பந்தோபஸ் நிலைப் பாதுகாப்புக்கு இத்தகைய அதிகாரம் அவசியமாகிறது என்று கூறினார். தடைக் காவலில் வைக்கப்படுவதற்கான காரணங்களை வெளியிடுவது தேச நலனுக்கு உகந்தது அல்ல என்றார்.
இம்மசோதாவின் கீழ் உள்ள அதிகாரங்களை அரசு அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்யாமல் கவனிக்கப்படும் என்று உள்துறை மந்திரி உறுதி கூறினார்.
இதன் பின் மசோதா ராஜ்யசபையில் நிறைவேறியது.
ஏற்கனவே வியாழனன்று லோக்சபையில் இம்மசோதா நிறைவேறியுள்ளதாகையால் இத்துடன் இம்மசோதாவை பார்லிமெண்ட் நிறைவேற்றி விட்டது. எனவே, எந்த நபரையும் காரணம் கூறாமல் தடைக்காவலில் வைத்திருக்க அரசுக்கு அதிகாரமளிக்கப்பட்டு விட்டது.
டாக்கா, ஜன. 24 - சென்ற திங்களன்று கடலில் மீன் பிடிக்கச் சென்ற வங்கதேச மீனவர்கள் 800 பேர் பெரும் அலைகளில் சிக்கி மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இன்று இங்கு வெளியான தகவல் இதைத் தெரிவிக்கிறது.
100 படகுகளில் இவர்கள் சென்றதாகவும் தால்சார் தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது பெரும் அலைகள் எழும்பியதில் அவர்கள் மூழ்கி விட்டதாகவும் பாரிசால் ஜில்லா அதிகார் ஒருவர் கூறியதாக தகவல் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.