முகப்பு
அரை நூற்றாண்டுக்கு முன்

21.3.1976: தொற்று நோயாளிகளை கட்டாய மலடாக்க மகாராஷ்டிரா முடிவு

தொற்று நோயாளிகளை கட்டாய மலடாக்க மகாராஷ்டிரா முடிவெடுக்கப்பட்டது பற்றி...

Updated On : 21 மார்ச் 2026, 4:07 am IST
21.3.1976
பகிர்:

பம்பாய், மார்ச். 19 - தொற்று நோய் உள்ளவர்கள் எல்லோரையும் கட்டாயமாக மலடாக்கும் அறுவைச் சிகிச்சை செய்ய மகாராஷ்டிர அரசாங்கம் உத்தேசித்திருக்கிறது.

மகாராஷ்டிர முதல் மந்திரி எஸ்.பி. சவாண் இன்று அம்மாநில அசெம்பிளிக் கூட்டத்தில் இதைத் தெரிவித்தார். ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில் அவர் இதைக் கூறினார்.

இந்த ஏற்பாடு உடனடியாக அமலுக்கு வரும். இப்படிப்பட்டவர்கள் குழந்தைகள் பெறும் வரை அரசாங்கம் தாமதிக்க முடியாது என்று அவர் சொன்னார்.

Advertisement

கட்டாயக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இது ஓர் அங்கம் என்று சுகாதார இலாகா துணை மந்திரி டாக்டர் லியோன் டிசூசா விளக்கினார்.

சேலம் உருக்காலை: கூடுதல் நிதி ஒதுக்க த.நா. கோரிக்கை

சென்னை, மார்ச். 20 - "தமிழ் நாட்டில் மத்திய சர்க்கார் ஆதரவுடன் நிறைவேற இருக்கும் பெருந் தொழில் திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி செய்ய வேண்டும்; குறிப்பாக சேலம் உருக்காலை திட்டத்திற்கு வருகிற நிதி ஆண்டில் செலவிடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மூன்று கோடி ரூபாய் போதாது. அந்த திட்டப் பணி நிறைவேற்ற வேகம் குன்றாமல் நடைபெற குறைந்த பட்சம 16 கோடி ரூபாயாவது ஒதுக்க வேண்டும் என்று மத்திய சர்க்காரிடம் தமிழக அரசு வற்புறுத்தி வருகிறது" என்று அரசாங்க தரப்பிலிருந்து நம்பகமாக அறியப்படுகிறது.

மாநிலத்தில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான செலவு வருவது எதிர்பார்க்கக் கூடியதே. அதே நேரத்தில் மதுவிலக்குத் திட்டம் காரணமாக மாநில நிதி ஆதாரத்தில் பெருமளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு கூடுதல் முதலீடு, மதுவிலக்கு காரணமான வருவாய் இழப்பு ஆகியவற்றை ஈடுகட்ட இதுவரை வரி விதிக்கப்படாத இனங்களில் வரி விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது' என்றும் மாநில பட்ஜெட்டில் புதிய வரி விதிப்புகள் குறித்து அந்த அதிகார வட்டாரம் விளக்கமளித்தது. விவசாயமல்லாத ஏனைய இதர முனைகள், விவசாய முனை ஆகிய அனைத்திலும் சரி சமமான தாங்கக் கூடிய அளவுக்கு வரி விதிக்க வேண்டிய அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் மத்திய சர்க்கார் துறையிலான பெருந் தொழில்களுக்கான முதலீடுகள் பெருமளவுக்கு வர வேண்டும் என்று கருத்து நிலவுவதாக அறியப்படுகிறது. இதன் தொடர்பாக சேலம் உருக்காலை திட்டம், நெய்வேலியில் இரண்டாவது நிலக்கரிச் சுரங்கம் வெட்டுவது, திருநெல்வேலி - கன்னியாகுமரி ரயில் பாதை அமைப்பு ஆகிய திட்டங்கள் தமிழக அரசினால் சுட்டிக் காட்டப்பட்டு இவற்றிற்கு அதிக முதலீடு செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுகிறது.

summary

Maharashtra decides to make it mandatory to sterilize infected patients

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.