மதுரைக்கு மெட்ரோ.. பேரம் பேசுவது மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? - ஸ்டாலின்
மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவது மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளதைப் பற்றி...
மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் விடியோவை மறுபதிவிட்டு, கேள்வியெழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவில், “பா.ஜ.க. எம்.எல்.ஏ-வைத் தேர்ந்தெடுத்தால்தான் மதுரைக்கு மெட்ரோ தருவோம் என்று பேரம் பேசுவதும், பிளாக்மெயில் செய்வதும்தான் மகாராஷ்டிர முதல்வரின் வேலையா?
Advertisement
Advertisement
அரசியலமைப்பின் மீது உறுதிமொழி ஏற்ற ஒரு முதல்வர், எதிர்க்கட்சி ஆளும் மாநிலத்தில் வந்து இப்படி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும். நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் புறக்கணிப்பை மீறி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வரும் சாதனைத் திட்டங்கள் எத்தனை என்று அவருக்குத் தெரியுமா?
தெரியாவிட்டால் கேட்டுத் தெரிந்துகொண்டு பேச வேண்டும். டபுள் எஞ்சின் என்று நீங்கள் பீற்றும் டப்பா எஞ்சின் மாநிலங்களையும் தாண்டி, திமுக ஆளும் தமிழ்நாடுதான் இரட்டை இலக்க (Double Digit) பொருளாதார வளர்ச்சியைச் சாதித்துள்ளது என்பது நினைவில் இருக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக 27 இடங்களில் போட்டியிடுகிறது.
வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று (ஏப். 6) பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், ராம சீனிவாசன் உள்பட பலர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
பாஜக வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதையொட்டி, பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் பலரும் கலந்து கொண்டனர். கோயம்புத்தூரில் வானதி ஸ்ரீனிவாசன் வேட்புமனுத் தாக்கலின் போது ராஜஸ்தான் மாநில முதல்வர் பஜன்லால் சர்மா, மதுரை தெற்கு வேட்பாளர் ராம சீனிவாசனின் மனுத்தாக்கலின் போது மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர், மதுரையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பேசுகையில், “மதுரையில் போட்டியிடும் ராம சீனிவாசனை நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். மீனாட்சி அம்மன் குடிகொண்டிருக்கும் மதுரை மாவட்டம் பிரதமர் மோடியின் மிகவும் விருப்பத்துக்குரிய நகராகவும் இருக்கிறது. நமது பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் வெற்றி பெற்றால், பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்து மதுரைக்கு மெட்ரோ ரயில் சேவையைப் பெற்றுத் தர நான் உறுதியளிக்கிறேன்” என்றும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க... காலில் விழுந்து ஆசி பெறுவது தமிழர்களின் பண்பாடு: உதயநிதிக்கு இபிஎஸ் பதில்!