அம்பத்தூர் பகுதியில் அரசு பொது மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகராட்சியாக இருந்த அம்பத்தூர், சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டது. மென்பொருள் நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் உள்ள முக்கியப் பகுதியாக அம்பத்தூர் திகழ்கிறது.
மேலும், லட்சக்கணக்கான மக்கள் அம்பத்தூர் சுற்று வட்டாரங்களில் வசித்து வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் பல்வேறு தேவைகளுக்காக அம்பத்தூருக்கு வந்து செல்கின்றனர்.
சென்னை மாநகர எல்லையாக உள்ள அம்பத்தூரில் தனியார் மருத்துவமனைகள் ஏராளமாக உள்ளன. ஆனால், ஏழை-எளியோர் பயன்பெறும் வகையில் அரசு பொது மருத்துவமனை இப்பகுதியில் இல்லை.
இங்குள்ள தொழிற்சாலைகளில் விபத்துகள் நேரிட்டாலோ, நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடினாலோ, சாலை விபத்துகள் நிகழ்ந்தாலோ இங்கிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும். போகும் வழி எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. எனவே, பெரும்பாலானோர் வழியிலேயே உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
எனவே, அம்பத்தூர் பகுதியில் அரசு பொது மருத்துவமனையை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.