ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே
ஒவ்வொரு ஆண்டும் வயது அதிகமாக ஆக அனைவருக்குமே நினைவுகள் மங்கத் தொடங்கும்
ஒவ்வொரு ஆண்டும் வயது அதிகமாக ஆக அனைவருக்குமே நினைவுகள் மங்கத் தொடங்கும். எதை எங்கே வைத்தோம் என்று ஆரம்பித்து முகங்களும் மெல்ல மறக்க ஆரம்பிக்கும். பொருட்களை அல்லது பணத்தை மறந்துவிட்டு தேடிக் கொண்டிருக்கும் நிலையில் பல முதியோர்கள் அவதியுறுகிறார்கள். நினைவாற்றல் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் சமயங்களில் பலவித உடல் மற்றும் மனப் பிரச்னைகள் ஏற்படும். அதற்கு முன்னிய காரணம் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பு இச்சமயங்களில் குறைந்துவிடும். அது அவர்களின் ஞாபக சக்தியை அதிகம் பாதிக்கிறது. ஏற்கனவே பழைய விஷயங்களை மறப்பது தவிர புதிதாக எதுவொன்றும் நினைவில் கொள்ள முடியாது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் ஆண்களின் நினைவாற்றலை விட நடுத்தர வயதுப் பெண்களின் நினைவாற்றல் சிறப்பாகவே செயல்படுகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.
நினைவுத் திறன் குறைதல் என்பது பெரிய பிரச்னை இல்லையென்றாலும், அதனால் சம்பந்தப்பட்டவர் நடைமுறை சிக்கல்களில் அவதிப்படுகிறார்கள் என்கிறார் ஜான் பின்கர்டன், நிர்வாக இயக்குனர், தி நார்த் அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி The North American Menopause Society (NAMS).
Advertisement
45 லிருந்து 55 வயது வரையிலுள்ள 212 ஆண்கள் மற்றும் பெண்களை இந்த ஆராய்ச்சிக்காக அவர் உட்படுத்தியிருந்தார். அவர்களின் மூளைச் செயல்பாடுகள், நினைவுத் திறன், பேச்சாற்றல் ஆகியவற்றை சோதித்த பின்னரே இந்த ஆராய்ச்சி முடிவை அவர் வெளியிட்டார். முப்பது வருடங்களுக்கு முன்னால் ஒரு பிறந்த நாளை அல்லது முக்கிய நிகழ்வை மறந்துவிட்டதாக இன்று வரை பெண்கள் கணவரை குற்றம் சாட்டுவது இந்த நினைவாற்றலின் சக்தியால் தான் போலும்!